ஆன்லைன் சூதாட்ட தடை! மகிழ்ச்சி.. முதல் ஆளாய் வந்த பாமக ராமதாஸ்! அப்படியே முதல்வருக்கும் கோரிக்கை!
சென்னை : ஆன்லைன் ரம்மிக்கு புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருப்பது பல தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்நிலையில் புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது!
மகிழ்ச்சியளிக்கிறது
அண்மைக்காலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. 3. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறேன். முந்தைய ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது!
சட்டமாக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக ஆளுனரின் ஒப்புதலை பெற வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். பாமக பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிக்க வேண்டுமென நீண்ட காலமாக கூறி வரும் நிலையில், சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.