Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவை மட்டும் கூட்டணிக்குள் சேர்த்துவிடாதீங்க... திமுக-பாமக நெருக்கத்தின் பகீர் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ஒரு சூழ்நிலையிலும் தேமுதிக-வை மட்டும் கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டாம் என்று திமுக தலைவர்களிடம் பாமக தரப்பில் இருந்து அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலின் போதே தேமுதிக, திமுக அல்லது அதிமுக கூட்டணி பக்கம் போகலாம் என கூறப்பட்டது. ஆனால் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது தேமுதிக.

தேர்தலில் தோற்றுவிட்ட தேமுதிகவின் எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதங்கள் கிளம்பின. அதேநேரத்தில் திமுக தரப்பில் இருந்து அடுத்தடுத்து விஜயகாந்த் நோக்கி பார்வை திரும்பியது. எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

விஜயகாந்த் வீட்டில் ஸ்டாலின்

விஜயகாந்த் வீட்டில் ஸ்டாலின்

இதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் திடீரென விஜயகாந்த் வீட்டுக்கே போய் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது கொரோனா நிவாரண நிதியாக ரூ10 லட்சம் வழங்கினார் விஜயகாந்த்.

தேமுதிக- திமுக கூட்டணியா?

தேமுதிக- திமுக கூட்டணியா?

இவ்வளவு நிகழ்வுகள் போதாதா? தேமுதிக தம்மை உயிர்ப்பித்துக் கொள்ள திமுகவுடன் கூட்டணி வைக்கும்; உள்ளாட்சித் தேர்தலில் திமுக- தேமுதிக கூட்டணி அமையும் என்றெல்லாம் சேதிகள் ரெக்கை கட்டிப் பறக்க தொடங்கின. ஏற்கனவே சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிக மிக குறைவான இடங்களையே திமுக ஒதுக்கியது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பெறுவதில் அனைத்து கூட்டனிகளும் மும்முரமாக உள்ளன.

பாமகவிடம் திமுக எதிர்பார்ப்பு

பாமகவிடம் திமுக எதிர்பார்ப்பு

இந்த நிலையில் பாமகவும் திமுகவுடன் நெருக்கம் பாராட்டி வருகிறது. ஒருவேளை பாமகவும் திமுக கூட்டணிக்கு வருகிறதோ? என்கிற அளவுக்கு மிக நெருக்கமான உறவாக மலர்ந்து வருகிறது. ஆனால் சில எதிர்பார்ப்புகளோடுதான் பாமகவும் திமுகவும் இந்த நெருக்கத்தில் இருக்கின்றன என்கின்றன அரசியல் வட்டாரங்கள். திமுகவை பொறுத்தவரை ஆட்சி மீதான எதிர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறது. இதனைத்தான் சட்டசபை வளாகத்தில் தம்மை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தேமுதிக- திமுக கூட்டணியா?

தேமுதிக- திமுக கூட்டணியா?

இந்த பின்னணியில் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றிருக்கிறார் ஜி.கே.மணி. டாக்டர் ராமதாசும் ஜி.கே. மணியும் பல அரசியல் நிகழ்வுகளை விவாதித்துள்ளனர். சட்டசபையில் பாமகவின் நிலைப்பாடு, பாஜகவுடனான பாமகவின் நட்பு, அதிமுக தலைமையிடமுள்ள நெருக்கம், 10.5% இடஒதுக்கீடு விவகாரம் என பல விவகாரங்களை இருவரும் விவாதித்திருக்கிறார்கள். கடைசியாக, விஜயகாந்தை வீடு தேடிப் போய் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது பற்றிய பேச்சு வந்துள்ளது. அதில், தற்போதைய சூழலில் தேமுதிகவின் அரசியல் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கும் மிகவும் பலவீனமாகியிருக்கிறது. அதை பலமாக்க திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலிருந்தே திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக விரும்புவதாக தகவல் வருகிறது. வட தமிழகத்தில் நம்மை (பாமக) பலவீனப்படுத்த தேமுதிகவை திமுக கையில் எடுத்தாலும் ஆச்சரியமில்லை என்று சொல்லி இருக்கிறார் ஜி.கே. மணி. மேலும் திமுக- தேமுதிக கூட்டணி அமைவதால் எப்படி எல்லாம் பாமகவின் எதிர்காலம் பாதிக்கும் என்பதையும் விரிவாகவே பேசினாராம் மணி. ஆகையால் இதில் தெளிவான அரசியலை நாம் கையாள்வது அவசியம் என தோன்றுகிறது " என்றும் சொல்லியிருக்கிறார் மணி.

ஸ்டாலின் விரும்பமாட்டார்

ஸ்டாலின் விரும்பமாட்டார்

அதற்கு, "செல்வாக்கு இல்லாத தேமுதிகவை வளர்த்துவிட முதல்வர் மு.க. ஸ்டாலின் விரும்பமாட்டார்னு நினைக்கிறேன். ஏன்னா, தேமுதிக வளர்ந்தால் திமுகவுக்கு என்ன சிக்கல் வரும்னு திமுகவுக்கு தெரியாதா? அதனால் திமுக-தேமுதிக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

துரைமுருகனுடன் ராமதாஸ் பேச்சு

துரைமுருகனுடன் ராமதாஸ் பேச்சு


அதன் பிறகு பாமக நிகழ்ச்சிகள் குறித்து சில விசயங்களை பேசிவிட்டு திரும்பி விட்டார் ஜிகே மணி. இந்த சூழலில், திமுக-தேமுதிக கூட்டணி உருவாவதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகனிடம் அண்மையில் பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதாவது, 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு நடந்த தொலைபேசி தொடர்பு அது. அப்போது துரைமுருகனிடம் தேமுதிக பற்றி ராமதாஸ் பேச, " அந்த கட்சியுடன் எல்லாம் கூட்டணி வராது; ஏற்கனவே கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கே சீட் ஒதுக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் தேமுதிகவை கூட்டணிக்குள் எதற்கு கொண்டு வரவேண்டும்? அப்படி எந்த யோசனையும் திமுகவிடம் இல்லை- தேமுதிகவும் வரும் என எதிர்பார்க்காவில்லை" என்று பதில் தந்திருக்கிறார் துரைமுருகன். அமைச்சர் துரைமுருகன் சொன்னதில் ராமதாஸுக்கு சந்தோஷம் என்றாலும் "கூட்டணிக்குள் தேமுதிக வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் " என்று அவரிடம் சொல்லியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

பாமக பதற்றம் ஏன்?

பாமக பதற்றம் ஏன்?

தேமுதிக பற்றி இவ்வளவு தூரம் டாக்டர் ராமதாஸ் கவலைப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, திமுக-தேமுதிக கூட்டணி உருவானால் வட தமிழகத்தில் பாமகவிற்கு பின்னடைவு ஏற்படும். அந்த பின்னடைவு லோக்சபா தேர்தலில் பாமகவின் பார்கெய்ன் பவரை குறைக்கும். அதனால் கூட்டணியில் சொற்ப இடங்கள் கிடைக்கும் நிலைமை உருவாகும். மேலும், திமுக தயவில் தேமுதிகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்தால் பாமகவின் எதிர்கால அரசியலுக்கு சிக்கலாகிவிடும். தேமுதிக மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டே போவதுதான் பாமகவுக்கும் நல்லது. இதை உணர்ந்துதான் பதற்றமாகிறார் ராமதாஸ். இந்த பதற்றம் தான் அமைச்சர் துரைமுருகனிடம் அவரை பேச வைத்தது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+