இன்னும் 10 நாட்களுக்குள் மேட்டர் ரெடி.. கட்சி தலைவர், செயலர், பொருளாளர் யார்.. ரஜினி விறுவிறு ஆலோசனை
ரஜினி இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்
சென்னை: ரஜினிகாந்த் தான் ஆரம்பிக்க போகும் புது கட்சியை 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக இன்று வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த ஒரு வார காலமாகவே ரஜினி செய்திகள் மீடியாவில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்பெல்லாம் ரஜினி பற்றின ஒரு செய்தி திடீரென வந்தாலும், வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். இதற்கு காரணம், ரஜினியின், அரசியல் வருகை பற்றி தெளிவான ஒரு முடிவு இல்லாததால், அவரது எந்த பேச்சையும் பெரிதாக யாரும் எடுத்து கொள்வதில்லை.
இப்போது அப்படி இல்லை.. கட்சி தொடங்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து, அது தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.. ரஜினியும் தான் ஆரம்பிக்க போகும் கட்சியில் திடமான உறுதிப்பிடிப்பை கொண்டுள்ளதால், அது சம்பந்தமான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இன்றுகூட, போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. அதாவது இன்னும் 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திற்கு ரஜினி சென்றார்.. அங்கும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில், புதுகட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகிய 3 முக்கிய பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து ரஜினி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.. இந்த 3 முக்கிய பதவிகள் யாருக்கு செல்ல போகின்றன என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜகவின் அர்ஜுனமூர்த்தியை நியமனம் செய்ததற்கு ஆங்காங்கே அதிருப்திகள் உள்ள நிலையில், இந்த 3 பதவிகளின் நியமனம், பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. இதனிடையே கட்சி தொடர்பான போஸ்டர்களில் தன் படத்தையோ, தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தியின் போட்டாவையோ பயன்படுத்த வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். ரஜினி போட்டோவை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்றும் சொல்லி உள்ளாராம்.