துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரரை சும்மா விடக் கூடாது! குற்றவியல் ஆக்ஷன் எடுங்க! -ராமதாஸ்
சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத்தை கொலைக் குற்றமாகவும், கூட்டுச் சதியாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான தனது ஆதங்கத்தை ராமதாஸ் டிவிட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

கூட்டுச் சதி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத்தை கொலைக்குற்றமாகவும், கூட்டு சதியாகவும் பார்க்க வேண்டும். அதற்கான தண்டனை வழங்க வேண்டும்.

தண்டனையின்றி தப்பிக்கக் கூடாது
ஆனால், இதை சாதாரண விதிமீறலாக மட்டும் கருதி துறை சார்ந்த நடவடிக்கையை மட்டும் அரசு மேற்கொள்வதை ஏற்க முடியாது. சாத்தான்குளம் காவல்நிலைய மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அதை விட கொடுமையான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது.

ராமதாஸ் ஆதங்கம்
எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

ராமதாஸை தொடர்ந்து
இதனிடையே இந்த விவகாரம் குறித்து ராமதாஸ் தான் முதல் குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து பிற அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தை கையில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications