அண்ணாவை போல செயல்படுகிறார் ஸ்டாலின்.. அதிமுக இனி தேர்தலில் வெல்ல முடியாது.. ஆர்.எம்.வீரப்பன் தடாலடி
சென்னை: எம்ஜிஆர் காலத்தோடு அதிமுக முடிந்துவிட்டது, இனியும் அந்த கட்சியால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது, என்று சீனியர் அரசியல் தலைவர் ஆர்எம் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தற்போது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக என்ற கட்சியை நிறுவினார் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.
ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?
திமுகவில் இருந்து எம்ஜிஆரை கட்சித் தலைவர் கருணாநிதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதுதான் அதிமுக உதயமாக காரணம்.
எம்ஜிஆருக்கு நெருக்கம்
திமுக மீது முறைகேடு புகார்கள் எழுவதால் கட்சியின் கணக்கு வழக்குகளை வெளியிடுமாறு எம்ஜிஆர் வலியுறுத்தினார், இதன் காரணமாகத்தான் கருணாநிதி அவரை நீக்கினார் என்பது திமுக மீது முன்வைக்கப்பட்ட புகார் ஆகும். திமுகவை விட்டு எம்ஜிஆர் நீக்கப்பட்டதும் அவரது நினைவுக்கு வந்தது ஆர்எம் வீரப்பன்தான். எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் அவர். நல்ல எழுத்தாளரும் கூட.
ஊர் வாயை மூட முடியாது
இந்த நிலையில்தான், அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர், "உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது , சத்தியம் நின்று ஜெயிக்கும் தர்மம் வெல்லும்" என்ற ஒரு மெசேஜ் வழங்கினார் . 1977 முதல் 1994 ஆம் ஆண்டு வரை ஐந்து அரசுகளில் அமைச்சராகவும் பதவி வகித்தார் வீரப்பன். அதாவது எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மட்டுமல்லாது ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் வீரப்பன் அமைச்சராக்கப்பட்டிருந்தார்.
சீனியர் அரசியல்வாதி
மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் வீரப்பன். எம்ஜிஆருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. 95 வயதில் அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை தி நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்தபடி உள்ளார் ஆர்.எம். வீரப்பன். இந்த நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு ஆர்எம் வீரப்பன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் அவர் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். இதோ, அவரது பேட்டியிலிருந்து சில வார்த்தைகள்..
ஜெயலலிதா, ஜானகி அம்மாள்
எம்ஜிஆர் என்றைக்கும் தனது அரசியலை பணம் சம்பாதிப்பதற்கு பயன்படுத்தவில்லை. அவர் 70 வருடங்கள் வாழ்ந்தார். நான் அவரோடு 35 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளேன். எம்ஜிஆர் நாடக மன்றம் அமைப்பின் மேலாளராக எனது முதல் சம்பளம் 60 ரூபாய். 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆரோடு இணைந்து தயாரித்துள்ளேன். 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாள் தேர்தல் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவ்வாறு முதலமைச்சர் பதவிக்கு நீங்கள் போட்டி போட வேண்டாம் என்று நான் அவரை கேட்டுக்கொண்டேன். ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மாள் ஆகிய இருவரும் அதிமுக தலைமைக்காக போட்டிப் போட்டால் எம்ஜிஆர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
ரஜினி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக நீக்கிய ஜெயலலிதா
நான் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்த போதிலும் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக இருந்த போது என்னை அவரது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இதன் பின்னணியில் இருந்தது சசிகலாவின் கணவர் நடராஜன் . அவர்தான் அதிமுகவில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து கொண்டு சென்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறி அவரை சம்மதிக்க வைத்தார். கட்சியின் நலனுக்காக நானும் அதற்கு சம்மதித்தேன். ஆனால் 1995ம் ஆண்டு என்னை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதா அரசுக்கு எதிராக ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அதில் நானும் பங்கேற்றேன் என்பதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிமுக வெற்றி பெற முடியாது
எம்ஜிஆர் தூவிய விதையின் காரணமாக தான் கடைசி சட்டசபை தேர்தலில் அதிமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .பணத்தை வைத்து ஜெயலலிதா கட்சியை நடத்தினார். ஆனால் தற்போதைய தலைவர்கள் அதையும் செய்ய முடியாது. அதிமுக இனியும் தேர்தல்களில் வெல்ல முடியாது. காங்கிரஸ் செய்த தவறுகளால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா தலைமையிலான திமுக போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வலுவான திமுகவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் புதிதாக ஒரு எதிர் கட்சி வலுப்பெற்றால் தான் உண்டு. ஆனால் இப்போதைக்கு அது போன்ற எந்த ஒரு சூழ்நிலையில் இல்லை. இவ்வாறு ஆர்எம் வீரப்பன் தெரிவித்துள்ளார்.