"ஒரே செகண்டில் காலி.. உடனே எனக்கு போன் பண்ணுங்க..".. செந்தில் பாலாஜி பேச்சு ஓவரா இருக்கே!
சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷமே மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு செல்லலாம், எந்த ஒரு அதிகாரியும் தடுக்க மாட்டாங்க.. அப்படி யாராவது தடுத்தாங்கன்னு வெச்சுக்குங்க, எனக்கு உடனே பண்ணுங்க.. அடுத்த நிமிஷம் அந்த அதிகாரி அங்கே இருக்க மாட்டார்" என்று திமுகவின் செந்தில் பாலாஜி பேசிய பேச்சு திடீர் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் அனலை கிளப்பி கொண்டிருக்கின்றன.. இந்த முறை திமுகவும், அதிமுகவும் சமபலத்தில் தேர்தலில் மோத உள்ளன.
ஆனால் திமுக தரப்பின் தேர்தல் அணுகுமுறைகளில் ஒருசில அதிருப்திகள் எழுந்து வருகின்றன.. ஏற்கனவே உள்கட்சி பூசல், உட்பட பல விவகாரங்களில் திமுக சிக்கி தவித்து வரும் நிலையில், பிரச்சாரங்கள் தொடர்பாகவும் சலசலப்புகள் எழுந்து வருகின்றன.
வேட்பாளர் பெயர் மறப்பு
திமுக தலைவர் பிரச்சாரத்தில் வேட்பாளர் பெயரையே மறந்துவிடுகிறார், அல்லது மாற்றி சொல்லி விடுகிறார் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், தற்போது வேறு வகையான புகார்களும் கிளம்பி உள்ளன. திமுக தன்னுடைய பிரச்சாரங்களை கையாளும் யுக்தியே புது தினுசாக இருக்கிறதாம்.. மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முறை, படுஆக்ரோஷமாகவும், மிரட்டும் வகையிலும் இருக்கிறது என்று பல்வேறு தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மக்களிடம் வாக்கு கேட்க சென்றுள்ளார்..
மண் அள்ளும் விவகாரம்
அப்போது, "திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷமே மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு செல்லலாம், எந்த ஒரு அதிகாரியும் தடுக்க மாட்டாங்க.. அப்படி யாராவது தடுத்தாங்கன்னு வெச்சுக்குங்க, எனக்கு உடனே பண்ணுங்க.. அடுத்த நிமிஷம் அந்த அதிகாரி அங்கே இருக்க மாட்டார்" என்று அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.. இதுதான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அதற்குள்ளேயே
தமிழக மக்கள் திமுகவுக்கு இன்னம் அதிகாரத்தை தரவே இல்லையே, அதற்குள்ளே திமுகவினர் ஆட்சிக்கு வந்துவிட்ட தோரணையில் உலா வந்தால் எப்படி? ஆட்சிக்கு வராமலேயே இப்படி ஒருமையில் அதிகாரிகளை பேசுவது கண்டனத்துக்குரியது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். செந்தில்பாலாஜிதான் இப்படி என்றால், திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் பொதுவெளி கூட்டத்தில் அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது ரவுடி அரசியலையும், 10 வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியையும்தான் வெளிப்படுத்துகிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது..
உதயநிதியும் இப்படித்தான்
இப்படித்தான் அன்று உதயநிதி ஸ்டாலின், அக்கறைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்துவிட்டு திரும்பும்போது, போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் உதயநிதியை தடுத்து நிறுத்தினார்.. மீனவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் பிரச்சாரம் செய்வது தவறு என்று சொன்னார்கள்.. உடனே அந்த அதிகாரி தடுத்து நிறுத்தினார் என்பதற்காக, "அந்த காவல் அதிகாரி பெயரைகுறித்து வைத்து கொண்டேன்.. ஆட்சிக்கு வந்ததும் அவரை பார்த்து கொள்கிறேன் என்று வார்னிங் செய்யும் தொனியில் பேசிவிட்டு போனார்..
அதற்குள்ளாகவே ரவுடியிசமா
ஏற்கனவே திமுக ரவுடியிஸத்துக்கு பேர் போன கட்சி என்று பரவலாக ஒரு பேச்சு எழுந்து வரும் நிலையில், இப்போது பிரச்சார தொனியும் அதேபோல மாறி வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.. இது அடாவடி அரசியல் என்றும், விமர்சிக்கப்பட்டு வருகிறது.. சமீபத்தில்கூட ஓசி பிரியாணி கேட்டு நடந்த சம்பவத்தை நாடறிந்து வைத்துள்ளது. திமுக தலைமை முதல் நேற்று இணைந்த உறுப்பினர்கள் வரை அதே ரவுடி குணம் உள்ளவர்களாக இருப்பதாகவும், தலைமை சரியாக இல்லையென்றால், கடைசி தொண்டனும் சரியாக இருக்க மாட்டான் என்றும் முணுமுணுப்புகள் திமுகவுக்கு எதிராக கிளம்பி வருகின்றன.