சூரிய கிரகணம்..வானத்தில் அதிசய நிகழ்வு எங்கெங்கு தெரியும்..வெறும் கண்ணால் பார்த்தால் என்ன பாதிப்பு?
சென்னை: தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள், புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம்.
சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.

சூரிய கிரகணம்
புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. அப்போது வெகு தொலைவில் இருக்கும் சூரியனை அளவில் சிறிய சந்திரன் மறைப்பது போல தோன்றும். வரும் 25-ம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும்.
இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். அந்தமான் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் முடிவடைகிறது. கிரகணம் முடிவடைவதை இந்தியாவில் காண முடியாது.
அதிகபட்சமாக கிரகணம் வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை தெரியும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும். கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை பார்க்காதீர்கள்
கிரகணம் இல்லாத நாட்களில் நாம் வெறும் கண்களால் சூரியனை பார்க்க முடியாது. அப்படி பார்க்கும்போது இமைகள் தானாகவே கண்களை மூடிவிடும். ஆனால், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும். அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும்.

பார்வை இழப்பு ஏற்படும் அபாயம்
இதனால், சிலருக்கு உடனடியாகவும், ஓரிரு நாட்களிலும் பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைதல் ஏற்படும். இதன்மூலம் ஏற்பட்ட பார்வை இழப்பை திரும்பக் கொண்டுவர முடியாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர் அதற்கான சிறப்பு கண்ணாடியை அணிந்து பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரகணத்தை எப்படி பார்க்கலாம்
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால், தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே ஷீட் போன்ற பொருட்கள் மூலமாகவோ பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை கொண்ட சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், கிரகண பிம்பத்தை திரையில் விழ வைத்தும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications