பிளாட்பார்ம் டிக்கெட்கள் வழங்குவதை நிறுத்திய தெற்கு ரயில்வே! அக்னிபாத் போராட்டங்களால் நடவடிக்கை
சென்னை: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் சென்னை மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு துறையின் முப்படைக்கான ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டும் பணி செய்ய முடியும். ஓய்வூதியம் கிடையாது என்பதால் இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அக்னிபாத் எதிர்ப்பு உக்கிரம்: டெல்லியில் காங். ரயில் மறியல்! நாடு முழுவதும் 529 ரயில் சேவைகள் ரத்து!
தொடரும் போராட்டங்கள்
அக்னிபாத் திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 14ல் அறிவித்த நிலையில் மறுநாளான ஜூன் 15ல் பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதன்பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியது. பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ரோஷமாக போராட்டங்கள் நடந்தன.
ரயில் நிலையங்கள் தான் குறி
குறிப்பாக ரயில் நிலையங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் காரணமாக பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்பட போராட்டம் நடக்கும் பல இடங்களுக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய ரயில்வேக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பந்த் கடைப்பிடிப்பு
இந்நிலையில் தான் அக்னிபாத் திட்ட போராட்டக்காரர்கள் நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பல இடங்களில் பந்த் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்
இந்நிலையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்னிபத் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த பிளாட்பார்ம் டிக்கெட்டு விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி எழுமலை வெளியிட்டுள்ளார். மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில்வே சொத்துக்ள சேதமாவதை தவிர்க்கவும் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி ரயில்வே நிர்வாம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.