'கொற்கை' நாகரிகத்தை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின்! - 3,000 ஆண்டு வரலாறு சொல்லும் உண்மை என்ன?
சென்னை: தமிழர் நாகரிகத்தின் பழங்காலத் தொட்டில் கொற்கை. இது சங்ககாலத்தில் மாபெரும் வணிக நகரம். ஆனால், இன்றைக்கு அது ஒரு சிற்றூர். சோழர்கள் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்தது. ஆனால், இப்போது கடலே இல்லை. இந்த சிற்றூரிலிருந்து 6 கி.மீட்டர் பயணம் செய்தால் கடலைப் பார்க்கலாம். கடலே இல்லாத ஊரில் எப்படி துறைமுகம் இருந்தது என்கிறீர்களா?
அதற்கும் பதில் உண்டு? கொற்கையில் இருந்த கடலைப் பார்க்கவேண்டும் என்றால், நீங்கள் கண்ணகி காலத்துக்குப் போக வேண்டும். அந்தளவுக்கு கடல் உள்வாங்கிவிட்டது.
சோழர் காலத்தில் கொற்கையில் முத்துக் குளித்தனர். 'கொற்கை முத்துக்களை எகிப்து பேரழகி கிளியோபாட்ரா விரும்பி அணிந்தாள்' என்பது சொல்லப்படும் செய்தி. ஏறக்குறைய 3 ஆயிரம் ஆண்டுகால வரலாறு இது. அதன் தடயங்களைக் கடலுக்கு அடியில் தேடும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.
மன சஞ்சலத்தை தீர்க்க 'மனம் திட்டம்'.. சுகாதாரத்துறையின் சூப்பர் முயற்சி! முழு விவரம் இதோ!
முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கிய ரூ.15 கோடி
தேசிய கடல்சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் மூலம், 'சாகர் தாரா' என்ற கப்பல் கொற்கையை ஆராய்ச்சி செய்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளார். ''தூத்துக்குடி துறைமுகம் முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில், சுமார் 13 கி.மீ தூர கடல் பகுதியில் இதன் முன்கள அகழாய்வு நடைபெறுகிறது'' என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. கொற்கையில் இதற்கு முன்பும் அகழாய்வு நடந்ததுள்ளது. குறிப்பாக, 'கங்கை சமவெளி வரை வாணிபம் நடந்துள்ளது' என்பதையும் 'ரோம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு கொற்கையிலிருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது' என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். 'கி.மு 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கொற்கை என்பது ஒரு வாணிப நகரம். இந்த கடல் ஆய்வின் மூலம் கொற்கை நாகரிகத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளிவரும்' என்கிறார், அமைச்சர் தங்கம் தென்னரசு.
பூம்புகாருக்கு கருணாநிதி தந்த அடையாளம்
'சிலப்பதிகாரம்' கூறும் காவிய காட்சிக்குக் கலைவடிவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பியவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. இதையடுத்து, 1973 ஆம் ஆண்டில் அவரது ஆட்சிக்காலத்தில் பூம்புகாரில் 'கலைக்கூடம்' அமைக்கப்பட்டது. கண்ணகி, கோவலன் என அனைத்து வரலாற்றுப் பாத்திரங்களுக்கும் முதன்முதலாக சிற்ப வடிவத்தைக் கொடுத்தார். எழுத்து வடிவிலிருந்த காவியத்தைக் காட்சி வடிவமாக மாற்றியதில் தமிழ்நாடு அரசியலில் கருணாநிதிதான் முன்னோடி. 1910 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் புகார் நகரம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கியிருந்தாலும், அதை மக்கள் புழங்கும் காட்சிக் கூடமாக மாற்றும் திட்டத்தை கலைஞருக்கு முன்பாக யாரும் யோசித்ததில்லை.
கொற்கையில் கிடைத்த 812 பொருள்கள்
அந்த வரிசையில் இன்று கொற்கையும் இடம் பிடித்துள்ளது. கொற்கையில் நடந்த அகழாய்வில் சங்கு வளையல்கள், கல் மணிகள், இரும்புத் துண்டுகள், செம்பு வளையல்கள், வடிகட்டும் குழாய், கங்கைச் சமவெளி பானை ஓடுகள், எகிப்து பானை ஓடுகள், சீன பானை ஓடுகள் என மொத்தமாக 812 பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், செங்கல் கட்டுமானமும் இரண்டு அடுக்கு செங்கல் சேமிப்புக் கலனும் கிடைத்துள்ளன. இதேபோன்ற கட்டுமானங்கள் முன்பு கீழடி, பூம்புகார், அரிக்கமேடு ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளன. மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களின் வணிக நகர நாகரிகத்தின் வரலாற்றுத் தடயங்களை அன்று முதல்வராக இருந்த கருணாநிதி தேடினார். இன்று அதன் இன்னொரு பகுதியாக விளங்கும் பாண்டியர்களின் வணிக நகர வரலாற்றைக் கடலுக்கு அடியில் தேடும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் தமிழர்களின் 3,000 ஆண்டுகால நாகரிகத்தை வெளிக்கொணரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கொற்கையில் நடந்த முதல் ஆராய்ச்சி
''1968 ஆம் ஆண்டு முதன்முதலாக கொற்கையில் ஆராய்ச்சி தொடங்கியது. அங்கு தோண்டப்பட்ட குழிகளில், இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் ஒன்று அகப்பட்டது. மொத்தம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட கட்டுமானம். கூடவே செங்கல் சுடுமண் உறைகளும் கிடைத்தன. மேலும், தமிழி எழுத்து வடிவம் கிடைத்தது. இந்தத் தடயங்களை வைத்துத்தான் கொற்கையின் காலம் கி.மு.785 எனக் கணிக்கப்பட்டது" என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் தங்கதுரை.
எங்கே உள்ளது கொற்கை?
தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை உள்ளது. திருச்செந்தூர் சாலையில் 25 கி.மீ தூரம் பயணித்தால் ஏரல் என்ற சிறிய டவுனை அடையலாம். அங்கிருந்து உமரிக்காடு வழியே 4 கி.மீ தூரம் சென்றால் கொற்கையை அடையலாம். இந்த ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வன்னிமரம் உள்ளது. மக்கள் அதனைத் தெய்வமாக வழிபடுகின்றனர். கொற்கை, 'தண்பொருநை' நாகரிகம் கரைபுரண்டு ஓடிய பகுதி. இன்றைய வழக்கில் சொல்வதானால், தண்பொருநை என்பது தாமிரபரணி. கொற்கையைப் பற்றி ஐங்குறுநூறு, 'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை' எனப் பாடுகிறது. இதனை ஆண்ட மன்னனை, 'வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்' என அகநானூறு பாடுகிறது. மேலும் 'மறப்போர் பாண்டியன் அறத்திற் காக்கும்' என்கிறது. பூம்புகாரிலிருந்து கண்ணகி கால் சிலம்புடன் நடந்துவந்து நீதி கேட்டு மதுரையை எரித்தபோது, கொற்கையை, 'வெற்றிவேற் செழியன்' என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஒரு பொற்கொல்லன் கொடுத்த தவறான தகவல்தான் மதுரை பற்றி எரியக் காரணம். ஆகவே, வெற்றிவேற் செழியன் தனது நாட்டில் வாழ்ந்த 1000 கொல்லர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு மன்னருக்கும் இரு தலைநகரங்கள் இருந்தன. சேர மன்னனுக்கு வஞ்சியும் முசிறியும். சோழ மன்னனுக்கு உறையூரும் பூம்புகாரும். பாண்டிய மன்னனுக்கு மதுரையும் கொற்கையும் இருந்தன. ஏன் இரு தலைநகரங்கள் என்கிறீர்களா? ஒன்று; நிர்வாக நகரம். மற்றொன்று; வணிக நகரம். கொற்கை வணிக நகரம். இதற்கு எகிப்து நாடு வரையில் வணிக உறவு இருந்தது. குறிப்பாக தெற்கு ஆசியா முழுக்க வணிகம் நடந்ததாகவும் தகவல் உண்டு.
கண்ணகி கோயில்
கொற்கையில் கண்ணகிக்குக் கோயில் உள்ளது. இங்குள்ள 'கன்னிமார் குட்டம்' என்ற குளத்தை 'மன்னரின் குளியலறை' என இன்றும் மக்கள் நம்புகின்றனர். Periplus of the Erythraean Sea என்ற கடல்வழி ஆவணம் கொற்கையை Colchi எனக் குறிப்பிடுகிறது. இதனை முதன்முதலாக 1876 ஆம் ஆண்டு கால்டுவெல் அகழாய்வு செய்தார். ''இந்த ஆய்வை, The Indian Antiquary என்ற இதழில் அவர் வெளியிட்டார்'' என்கிறார் ஆய்வாளர் செல்வக்குமார். 'காவியம் - கற்பனை' என்று புறந்தள்ளப்பட்ட தமிழர்களின் நாகரிகத்தை ஆய்வு செய்து, 'அதற்கான அனைத்து தரவுகளும் உண்மை' என்பதை கொற்கை அகழாய்வின் மூலம் உலக அரங்கில் நிரூபிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.