அடி தூள்! ரேஷன் கடைகளில் ரூ.1000 & பொங்கல் தொகுப்பை வாங்காம 'மிஸ்' பண்ணிட்டீங்களா? மீண்டும் சான்ஸ்!
சென்னை : தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை பெறாதவர்கள் இன்று முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் சென்றவர்கள் பெற்றுக்கொள்ள வசதியாக இன்று முதல் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி 1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை பொங்கல் தொகுப்பாக தமிழ்நாடு அரசு வழங்கியது.
கடந்த 9ஆம் தேதி முதல் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட சதவீதத்தினர் இன்னும் இந்தத் தொகுப்பைப் பெறவில்லை.
காணும் பொங்கல்..சென்னை முதல் குமரி வரை..சுற்றுலா தலங்களில் உற்சாக கொண்டாட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கியது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து 5 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி 15 மற்றும் 16-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்று முதல் பெறலாம்
பொங்கல் பண்டிகையையொட்டி அதிகமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றதால் விடுமுறை முடிந்து வந்த பின்னர் பரிசுத் தொகுப்பை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் சென்றதால், பொங்கல் பரிசு பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பணத்தையும் தொடர்ந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை வாங்காதவர்கள்
இதுவரை 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் , அவர்கள் வாங்க ஏதுவாக இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
உத்தரவு வரவில்லை
இதுகுறித்து பொது விநியோகத்துறை தரப்பில் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1,000 ரொக்கப்பணம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து விநியோகித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.