ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்குமா? தைப்பூச நாளன்று என்ன செய்வது? தமிழக அரசு விளக்குமா?
சென்னை: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தற்போதைய கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் வரும் 16-ந் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் தைப்பூச நாளில் கோவில்களில் வழிபாடு நடத்த முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் தரும் அல்லது விலக்கு அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்த ஆலோசனைக்குப் பின்னர் தற்போதைய இரவு நேர ஊரடங்கு வரும் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஜனவரி 16-ந் தேதி ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ஜனவரி 16-ந் தேதியன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது ஜனவரி 16 முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முழு லாக்டவுன்
அத்துடன் ஜனவரி 16-ந் தேதி முழு லாக்டவுன் எனில் பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் பணி இடங்களுக்கு திரும்ப முடியாது. மாட்டு பொங்கல் அன்றே கிளம்பியாக வேண்டும் அல்லது திங்கள்கிழமைதான் புறப்பட முடியும் என்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.

தைப்பூசத்தன்று வழிபாடு இல்லை?
இதேபோல் ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம். அன்றைய தினம் அரசு விடுமுறை. தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். தற்போது ஜனவரி 18 வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என்கிற போது தைப்பூச நாளில் வழிபாடு நடத்த முடியாத நிலை உள்ளது. இது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் தருமா? அல்லது விலக்குகள் அளிக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications