வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. என்ன தான் சிகிச்சை..பரவாமல் தடுக்க என்ன செய்யனும்? மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: மெட்ராஸ் ஐ நோயினால் தினமும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மெட்ராஸ் ஐ வராமல் எப்படி தடுப்பது என்றும்.. பாதிப்பு ஏற்பட்டால் விரைவில் குணமடைய என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும்.. பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பருவ மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று மெட்ராஸ் ஐ. கண்ணின் கன்சங்டிவா என்ற விழி வெண்படலத்தால் ஏற்படும் நோய் இதுவாகும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது பரவும். குறிப்பாக அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது.
தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு.. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
எதனால் மெட்ராஸ் ஐ என்ற பெயர்
சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் முதன் முதலாக இந்த நோய் கண்டறியப்பட்டதால் இந்த நோய் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படுகிறது. மெட்ராஸ் ஐ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டதாகும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும்.
மருத்துவர்கள் கூறியதாவது
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் தற்போது இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், மெட்ராஸ் ஐ நோய் பரவல் தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறுவதாவது:- பருவ மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஓரளவு அதிகரிக்கும்.
தீவிர பிரச்சினையாக மாற வாய்ப்பு
நடப்பு ஆண்டு சென்னையில் மழை தொடர்ந்து நீடிப்பதால் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்து இருக்கிறது. மெட்ராஸ் ஐ நோயை பொறுத்தவரை ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு பரவும் தன்மை கொண்டதாகும். மெட்ராஸ் ஐ பொறுத்தவரை சிறிய அளவிலான கண் தொற்று பாதிப்பு என்றாலும் உரிய சிகிச்சை பெறாவிட்டால் இது தீவிர பிரச்சினையாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும்
பலரும் மெடிக்கலில் ஆண்டிபயாட்டிக் பயன்படுத்திய பிறகுதான் மருத்துவர்களிடம் வருகின்றனர். கண் நோய் பாதித்தவர்கள் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேப்பர் மற்றும் நாப்கின்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.
நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம்
மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த உணவை சாப்பிட வேண்டும். கண்ணுக்கு நல்ல ஓய்வு கொடுப்பது அவசியம். இவற்றை பின்பற்றினால் விரைவில் மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து மீள முடியும். மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தாங்கள் உபயோகித்த பொருட்களை மற்றவர்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது
கண்களில் நீர் வடிவது நிற்கும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் மூடிய அறைகளுக்குள் மெட்ராஸ் ஐ எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது" என்றார். சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகரித்து இருக்கும் நிலையில், மக்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி
மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் விரைந்து பரவும் தன்மை கொண்டது என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.
தினம் தோறும் 4,500 பேர்
நோய் பரவலை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தினம் தோறும் 4,500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மெட்ராஸ் ஐ பாதித்ததால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது" என்றார்.
பாட்டி வைத்தியத்தை தவிர்க்கனும்
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் நாள்தோறும் 80 முதல் 100 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. அதிகபட்சமாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகம் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பில் இருந்து தப்பிக்க பாட்டி வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் டாக்டர்களை அணுக வேண்டும். மெட்ராஸ் ஐ க்கான மருந்து தட்டுப்பாடும் இல்லை. தெரிவித்தார்.