மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்.. யோசனையை வரவேற்ற வேல்முருகன்! கூடவே வைத்த மற்றொரு கோரிக்கை
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், இதை வரவேற்று மிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை பேசிய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காகச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.
இது அரசியல் அரங்கிலும் இப்போது கவனம் பெறத் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்த இந்த யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் யோசனைக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
வேல்முருகன்
அதேபோல முதல்வர் ஸ்டாலினும் இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் இதற்கு வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
வழக்காடு மொழி
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வழக்குத் தொடுக்கும் சாமானியர்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348 -வது பிரிவு, மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழியை வைக்கலாம் எனக் கூறியுள்ளது.
தமிழ் மொழி
இது தொடர்பான மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தாலே போதும். ஆனால் அதை ஒன்றிய அரசு செய்யவில்லை. 1976-ம் ஆண்டில் ஒன்றிய அரசு அலுவல் மொழி சட்டத்திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம் என்றுள்ளது. அதையும் அவர்கள் செய்யவில்லை. குறிப்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் கடந்த 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
கோரிக்கை
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்சநீதிமன்றமும், ஒன்றிய அரசும் நிறைவேற்ற வேண்டும். இந்த நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்றார்.