2 இடி.. நெருக்கடி வளையம் அமைத்த எடப்பாடி! அன்று சசிகலா.. இன்று ஓபிஎஸ்! ஆஹா.. அதே மாதிரி சிக்கல்!?
சென்னை : அன்று சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்ததற்கு அதிமுகவினர் போலீசில் புகார் அளித்து, சசிகலாவை தனது காரில் தமிழ்நாட்டுக்கு வரவிடாமல் செய்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். இன்று ஓபிஎஸ்ஸுக்கும் அதே போன்ற நிலை, எடப்பாடி பழனிசாமி தரப்பால் வந்துள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுகவினர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவதால் இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஈபிஎஸ் தரப்பு சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய நிலையில் அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் மூலமும், ஈபிஎஸ் மூலமும் இரண்டு இடிகள் இறங்கியுள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது. இதனையடுத்து பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

கடுமையான அட்டாக்
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருமே தங்கள் அணியை வலுப்படுத்தும் வகையில் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அதிரடி காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமித்து மாவட்ட செயலாளர்களை கூட்டத்தையும் நேற்று நடத்தி முடித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் உள்ளிட்டோர் கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

எடப்பாடிக்கு சாதகம்
எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா? என சவால் விடுத்த ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இதனை ஈபிஎஸ் தரப்பு தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது.

லீகல் நோட்டீஸ்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு செக் வைக்கும் விதமாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர் நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் பொறுப்பு ஈபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து லீகல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

குடைச்சல் - ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியின் இந்த நோட்டீஸிற்கு உடனடியாக ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு குடைச்சலாக மாறியுள்ளது. ஓபிஎஸ் தரப்பு மா.செக்கள் கூட்டத்தை நடத்திய நிலையில் அடுத்தடுத்து தேர்தல் ஆணையம், ஈபிஎஸ் மூலம் இரண்டு இடிகள் இறங்கியுள்ளன. ஈபிஎஸ் தரப்பின் நோட்டீஸை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஓபிஎஸ் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா காரில் அதிமுக கொடி
சசிகலா சிறையில் இருந்து வந்ததும், அதிமுக கொடி கட்டிய காரில் பயணித்தார். சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் தெரிவித்து வந்த சூழலில் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தெரிவித்தனர். சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக டிஜிபியை சந்தித்தும் அப்போதைய அமைச்சர்கள் புகார் அளித்தனர்.

சசிகலா மாஸ்டர் மூவ்
சசிகலா கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பியபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. தமிழகம் வந்த சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி, கட்சிக் கொடி கட்டப்பட்ட நிலையில் சென்னை வந்தார் சசிகலா. அதை காவல்துறையாலோ அரசாலோ தடுக்க முடியவில்லை. சசிகலாவின் மாஸ்டர் மூவ் இது என்று பேசப்பட்டது.

அன்றும்.. இன்றும்
அன்று சசிகலா காரில் அதிமுக கொடி இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் புகார் அளித்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓபிஎஸ் தான். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது என அதிமுக சார்பில் போலிசாரிடம் புகார் அளித்தபோது ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக எடுத்த முடிவு சரி என்றால், இப்போது, கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என ஈபிஎஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்புவதும் சரிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications