ஹரிஜன் என ஜாதிவெறி பேச்சு.. ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் நடமாட முடிகிறதாம்: வன்னி அரசு
சென்னை: தலித்துகளை ஹரிஜன் என தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஜாதிவெறிதான்; விடுதலை சிறுத்தைகள் ஜனநாயகத்தை ஏற்று செயல்படுவதால்தான் ஆளுநர் இன்று தமிழகத்தில் நடமாட முடிகிறது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தலித்துகளின் கல்வி நிலை பற்றி குறிப்பிட்டார். அப்போது தலித்துகள் என்ற வார்த்தைக்குப் பதில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
புது கார் வாங்கிய சந்தோஷத்தை விடவும், இதுதான் முக்கியம்.. மகாலட்சுமி வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு
ஹரிஜன் சொல்லுக்கு தடை
ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு தடை விதித்துவிட்டது. ஆதி திராவிடர்கள், பட்டியலின மக்கள், தலித்துகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் திடீரென ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமது கண்டன அறிக்கையில், ஹரிஜன் என்றால் அப்பன் பெயர் தெரியாதவன் என பொருள். தடை செய்யப்பட்ட சொல்லை தமிழக ஆளுநர் பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்குரியது என்றார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எச்.ராஜா ட்விட்டர்
இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடர்பான ட்விட்டர் பதிவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நேற்று ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்; ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் தியாகத்தையும் சேவையும் வீரத்தையும் போற்றுவோம் என கூறியிருந்தார் எச்.ராஜா. இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
ஆளுநருக்கு வன்னி அரசு வார்னிங்
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பங்கேற்றார். அதில் பேசிய வன்னி அரசு, ஆளுநர் ஹரிஜன் என்ற சொல்லை ஜாதிவெறியோடு பேசி இருக்கிறார். ஆதி திராவிடர் என சொல்லை பயன்படுத்த அவர் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜனநாயகத்தை ஏற்று செயல்படுகிறது. அதனால்தான் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நடமாட முடிகிறது என்றார் வன்னி அரசு.