அடிலெய்ட் மைதானம்.. சிக்கலில் இந்தியா.. இங்கிலாந்துக்கு சாதகம்.. அரையிறுதியில் யாருக்கு வெற்றி?
சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றி பார்க்கலாம்.
திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடுக்கென்று யோகம் வந்தது போல், அரையிறுதிக்கு செல்லும் கனவோடு இருந்த தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு அடித்தது யோகம். இதன் பின்னர் குரூப் 1 சுற்றில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியுடனான அரையிறுதியில் வேறு மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் இந்திய அணிக்கு மறைமுகமாக சில பிரஷர் ஏற்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் 7 பவுலிங் ஆப்ஷன்களும், 9வது விக்கெட் வரை அதிரடியாக ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களோடு இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி; இந்தியா, பாகிஸ்தானுக்கு கோப்பை வாய்ப்பு
ஸ்விங்கில் அசத்தும் இந்தியா
இங்கிலாந்து அணியை விடவும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆட்டம் நடக்கப் போவது அடிலெய்ட் மைதானத்தில் தான். இதுதான் இந்திய அணிக்கு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய போதே, இந்திய அணியின் பந்துவீச்சு முழுக்க முழுக்க ஸ்விங்கை மட்டுமே நம்பி இருந்தது. ஆஸ்திரேலிய மைதானங்களில் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப இந்திய மைதானங்களிலேயே புவனேஷ்வர் குமாரும், அர்ஷ்தீப் சிங்கும் செயல்பட்டு வந்தனர்.
10 விக்கெட்டுகள்
அதனால் தான் இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரின் போது மைதானத்தில் ஸ்விங் இருந்தும் பந்தை மேல் குத்தி புவனேஷ்வர் பந்தை வீசினார். அதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் புவனேஷ்வர் குமாரும், அர்ஷ்தீப் சிங்கும் இந்திய அணியின் அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மைதானங்களில் உள்ள ஸ்விங்கை பயன்படுத்தி பவர் ப்ளே ஓவர்களிலேயே இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மட்டும் இருவரும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
யாருக்கு சாதகம்?
இதனால் பவர் ப்ளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்களின் சராசரி 17.10 ஆகவும், எகானமி 5.7ஆகவும் உள்ளது. ஆனால் அடிலெய்ட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே விக்கெட் எடுக்க முடியாமல் 60 ரன்களை விட்டுக் கொடுத்தது. அதற்கு அடிலெய்ட் மைதானத்தில் ஸ்விங் இல்லாததே காரணம். அதுமட்டுமல்லாமல் அடிலெய்ட் மைதானம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும்.
அடிலெய்ட் மைதானம்
ஆனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் இங்கிலாந்து போன்ற வலிமையான பேட்டிங்கை வைத்துள்ள அணிக்கு, சேஸிங் கொடுப்பது கோப்பையை தூக்கி கையில் கொடுப்பதற்கு சமம். இந்த மைதானத்தில் ரோஹித் ஷர்மா டாஸ் வெல்லாமல், தோற்பதே சிறந்த முடிவாக இருக்கும். ஏனென்றால் பிட்ச் எந்த நேரத்தில் எப்படி செயல்படும் என்று கணிப்பது சுலபமாக இருக்கப் போவதில்லை.
பட்லர் vs புவி
புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஸ்விங் இல்லையென்றால் ஷமியை வேகமாக ஆட்டத்திற்குள் கொண்டு வருவது மட்டுமே சிறந்த முடிவாக இருக்கும். அதேபோல் அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாதவாறு இருப்பது மிகமுக்கியம். அதேபோல் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லருக்கு எதிராக புவனேஷ்வர் குமார் மிரட்டலான சாதனையை வைத்துள்ளதால், இன்றைய போட்டியில் பட்லரை மீண்டும் வீழ்த்தினால் ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்குள் வரும்.
டிகே அல்லது ரிஷப் பன்ட்?
இதனிடையே இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத், மொயின் அலி, லிவிங்ஸ்டன் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பன்ட் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப நேற்றைய வலைபயிற்சியில் ரிஷப் பன்ட் அதிக நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பவுண்டரி எல்லை குறைவு
அடிலெய்ட் மைதானத்தின் ஸ்கொயர் பவுண்டரியின் எல்லை குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப இந்திய அணியின் திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதனை களத்தில் செயல்படுத்தினால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது நிச்சயம்.