கஜாவுக்காக வராத மோடி.. இப்ப மட்டும் அடிக்கடி ஓடி வருவது ஏன்.. மக்கள் குமுறல்
சென்னை: தமிழக மக்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தானா .. இதுதான் தமிழகத்தில் இப்போது மக்களின் மைன்ட் வாய்ஸ்.
கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டபோது தமிழகம் மட்டுமன்றி இந்தியாவே கண்ணீர் வடித்தது. அந்த மக்களுக்காக ஆறுதல் கூற யார் யாரோ ஓடி வந்தனர். தங்களால் இயன்ற அளவுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஆனால் இந்திய நாட்டின் பிரதமர் ஆறுதலாக ஒரு வார்த்தையோ அல்லது எது எதற்கோ ட்விட்டரில் பதிவிட்டு பதில் கூறும் பாணியில் ஒரு பதிலோ கூறவில்லை.
பிரதமர் வராததோடு நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் போன்ற மூத்த அமைச்சர்களோ கூட தமிழகம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நிறைவாக நடந்து கொண்டிருக்கிறது என்று அரசு இயந்திரங்கள் கூறிக்கொண்டு இருந்தபோதே தங்கள் வீட்டில் கூரை வேய்வதற்காக தங்களது மகனை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்காக விற்ற சம்பவமும் நடைபெற்றது. அப்போதும் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
திருப்தி தராத நிதி ஒதுக்கீடு
அதன் பிறகு தமிழக அரசு கஜா புயல் பாதிப்பிற்காக நிவாரணத் தொகை வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியது. அப்போது மத்திய அரசும் நிதி கொடுத்தது. ஆனால் இந்த நிதி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அளவுக்கு இருந்தது. வெறும் 2000 கோடிகளுக்குள் மட்டுமே நிவாரணம் அளித்தது மத்திய அரசு. அதோடு தனது கடமை முடிந்து விட்டது என்றே மத்திய அரசு கருதியிருக்க வேண்டும். இல்லை என்றால் குறைந்த பட்சம் அதன் பிறகாவது தனது அமைச்சரைவையில் இருந்து மூத்த அமைச்சர்களையோ அல்லது பாஜக வில் இருந்து தனது நம்பிக்கைக்குரிய தளபதியான அமிட்ஷாவையோ அனுப்பி கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்தோ அங்குள்ள மக்கள் குறித்தோ மக்களை சந்திக்க நேரமில்லாத பிரதமர் குறைந்த பட்சம் கேட்டாவது அறிந்திருக்கலாம். அதையும் மத்திய அரசு செய்யவில்லை.
கஜா புயல் குறித்து கப்சிப்
அதன் பிறகு கடந்த மாதம் ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மீண்டும் அடிக்கல் நாட்டுவதற்காக வந்த பிரதமர் மோடி அந்த மேடையிலாவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம். இதை அந்த பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். அவர்கள் மட்டுமல்லாது அவர்களோடு தோளோடு தோள் நின்ற தமிழக மக்களே எதிர்பார்த்தனர். ஆனாலும் ஒரு வார்த்தை கூட பேசாமலே சென்று விட்டார் பிரதமர் .
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல
இப்படியாக டெல்டா மாவட்ட மக்களும் தமிழக மக்களும் குமுறிக் கொண்டிருந்தபோதுதான் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வெறுமனே 2000 கோடிகளுக்குள் மட்டுமே கொடுத்துவிட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ. 4500 கோடிகளை கொட்டிக் கொடுத்தது மத்திய அரசு. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே துன்பத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுத்தது.
படையெடுக்கும் தலைவர்கள்
இப்படி இருக்கையில் இன்னமும் புயலின் வடுக்கள் மாறாமல் அல்லது புயலின் பாதிப்பினால் மக்களின் கண்ணீர் இன்னமும் காயாமல் இருக்கும்போதே இப்போது கூட அந்தப் பகுதிக்கு செல்லாமல் இன்று திருப்பூருக்கு வருகிறார். அடுத்ததாக மீண்டும் கன்னியாகுமரிக்கு வரவிருக்கிறார். அதோடு பாஜகவின் தலைவர் அமித் ஷாவும் தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளார். நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் விரைவில் தேர்தல் பணிகளுக்காக தமிழகம் வர உள்ளனர். அதாவது மூத்த பாஜக தலைவர்கள் இப்போதுதான் தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.