ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! மநீம சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறாரா? பாஜகவிடம் விட்டதை பிடிப்பாரா?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார்.
திருமகன் ஈவெராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் பேட்டி!
பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல்
இந்த நிலையில் இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். அதற்கு மாறாக அவருடைய இன்னொரு மகன் சஞ்சய் சம்பத்திற்கு சீட் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள்
தன்னை போல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சீட் கேட்டுள்ளனர். அவர்களில் யாருக்கு தொகுதியை ஒதுக்கலாம் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என கூறிவிட்டார். இந்த நிலையில் அதிமுக சார்பில் யார் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனிடையே ஓபிஎஸ் போட்டி வேட்பாளரை நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துவிட்டார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக சார்பில்
அது போல் அமமுக சார்பில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதனுடன் தானே கூட போட்டியிடலாம் என்ற ஹிண்ட்டையும் கொடுத்துவிட்டார். அது போல் பாமக இந்த தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என கூறிவிட்டது.
மக்கள் நீதி மய்யம் சார்பில்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு வானதி சீனிவாசனுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார். எனவே கொங்கு பெல்ட்டில் செல்வாக்குடன் இருக்கும் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
கமல்ஹாசன் போட்டியிடுவாரா
அண்மையில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மக்கள் நீதி மய்யமும் காங்கிரஸ் கட்சியும் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசனும் அந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் முழு கவனத்தையும் வைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட மாட்டார் என தெரிகிறது. ஒரு வேளை காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் நபருக்கு ஆதரவு தருவார் என்றும் கூறப்படுகிறது.