ஜாலியாக இருந்துவிட்டு.. இப்ப வேண்டாம்னு சொல்றார்... தர்ணாவில் குதித்த பெண்.. சிக்கலில் கணவர்!
சென்னை: "ஜாலியாக இருந்துவிட்டு.. இப்போது என் கணவர் என்னை வேண்டாம் என்கிறார்... அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.. சாப்பாடு, தண்ணி, மாற்று துணி எதுவுமே எனக்கு இல்லை" என்று இளம் மனைவி தர்ணாவில் ஈடுபட்டதுடன், போலீசிலும் கணவன் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத்.. இவர் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்... 21 வயதான பரமேஸ்வரி என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினர்.
ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது.. அதனால் பரமேஸ்வரி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.. கொஞ்ச நாளில் மனம் மாறி திரும்பவும் கணவனுடன் சேர்ந்து வாழ வந்தார்.
ஆனால் அவரது நடத்தை சரியில்லை என்று கிருஷ்ணபிரசாத் சொல்லி, வாழ மறுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி திருவொற்றியூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார். போலீசாரும் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. ஆனால் பலன் இல்லை. பரமேஸ்வரி வேண்டவே வேண்டாம் என்று கிருஷ்ணபிரசாத் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் ஜனவரி மாதம் 27-ந்தேதி பரமேஸ்வரி, கணவருடன் சேர்த்து வைக்க கோரி திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் தம்பதியிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஒரு சில நாட்கள் 2 பேரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
பிறகு மறுபடியும் தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது... கணவர் வீட்டு முன் பரமேஸ்வரி உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.. மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்துவதாகவும், கணவன் வீட்டில் பாதுகாப்பு இல்லை. என்றும்கூறி தன்னந்தனியாக தர்ணாவில் இறங்கினார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பரமேஸ்வரியிடம் சமாதானம் பேசினர். கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு பிறகு அவரை ஸ்டேஷன் அழைத்து சென்று பேசினர்.
அப்போது போலீசாரிடம் பரமேஸ்வரி சொல்லும்போது, "ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார்கள்.. மன உளைச்சலில் உள்ளேன்.. போன வாரம் என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சொந்த ஊரான கேரளாவுக்கு போய்விட்டனர்.. 3 நாட்கள் சாப்பாடு, தண்ணி இல்லாமல் தவித்தேன்.. முதல் மாடி வழியாக கீழே குதித்து உயிர் தப்பினேன்... இதில் காயமும் ஏற்பட்டது. எனக்கு மாற்று துணி கூட இல்லை.. தர மறுக்கிறார்கள்.. அவர்கள் மீது நடவடிக்கை தேவை" என்று கண்ணீர் மல்க கூறினார்.