மீண்டும் கமல்.. அதே கோவையில்..! அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் மநீம? புதிய மாஸ்டர் பிளான் தயார்
கோவை: சட்டசபைத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மநீம தலைவர் கமல் கோவை சென்றுள்ளார். இதில் கட்சியை வலுப்படுத்துவது, உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டம் எனப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என மநீம நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாகக் களமிறங்கியது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே அக்கட்சியின் தலைவர் கமல் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யத் தொடங்கியிருந்தார்.
கமல் ஹாசன் தமிழ்நாடு அரசியலில் பல புதிய மாற்றங்களை நிகழ்த்துவார். சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் எனப் பலரும் தெரிவித்திருந்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிவிட்டாரா கமல்?.. கோவையிலிருந்து பயணம் தொடங்குகிறதா?
சட்டசபைத் தேர்தல்
ஊழல் ஒழிப்பு என்பதையே பிரதானமான முழக்கமாகக் கொண்டு சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தார் கமல். இருப்பினும், இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அக்கட்சியால் வெறும் 2.62% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
கமல் ஹாசன்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் கட்டாயம் வெல்வார் என்றே பலரும் கணித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் போதும் பல சுற்றுகளில் கமல் ஹாசனே முன்னிலையில் இருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் அவர் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில வாரங்களிலேயே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பலரும் வெளியேறத் தொடங்கினர்.
மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார்.மேலும், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளுக்குக் கமல் மதிப்பளிப்பதில்லை என்றும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் கமல் மாறவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மாநில பொறுப்பாளர்கள் மட்டும் விலகவில்லை, மாவட்ட அளவிலும் கூட பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.
அடுத்தகட்ட நடவடிக்கை
சினிமா துறையில் தொட்டதையெல்லாம் வெற்றியாக மாற்றும் அல்லது வெற்றியாக மாற்றும் வரை விடாத உழைக்கும் கமலின் முதல் அரசியில் பாடம் சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்த தேர்தல் தோல்வி, நிர்வாகிகள் விலகல் ஆகியவை பற்றி கமல் துளியும் கவலைப்படவில்லை. இத்தனை காலமாக அமைதி காத்த கமல், கட்சியை வலுப்படுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்.
அதே கோவையில்
அதுவும் சட்டசபைத் தேர்தலில் எங்கு தோற்கடிக்கப்பட்டாரோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்குக் கமல் நன்றி தெரிவிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் கோவையில் தங்கவுள்ள கமல், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.
கமலுக்கு உற்சாக வரவேற்பு
இதற்காக நேற்றிரவு விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். இரவு நேரத்திலும் கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களும் மநீம நிர்வாகிகளும் கமலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து கோவையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றுக்குச் சென்ற கமல், இரவு அங்கு ஓய்வெடுத்தார்.
வலுப்படுத்த நடவடிக்கை
அடுத்த 2 நாட்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை மீண்டும் கட்டமைப்பது குறித்து பல்வேறு அறிவிப்புகளைக் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கட்சியை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை. அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இருந்தால், இதற்கு உதவியாக இருக்கும் எனக் கருதும் கமல், மாற்றுக்கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் நேர்மையான அரசியல்வாதிகளைத் தன்வசம் இழுக்கத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்
அதேபோல 51,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற கமல், வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார். கோவை பகுதியில் கமலுக்கும் மக்கள் நீதி மயத்திற்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. எனவே, சரியாகத் திட்டமிட்டு முறையாக வேலை செய்தார் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற முடியும் என மநீம நிர்வாகிகள் நம்புகின்றனர். ஆக, புதுத்தெம்பை அளிக்கும் கமலின் இந்த கோவை பயணத்தில் பல அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர் மநீம நிர்வாகிகள்..!