Exclusive: 'ஜீரோ' பாஜக.. திமுக, அதிமுக வயித்துப் பொழப்பு போச்சு - மநீம மகேந்திரன் 'சுளீர்'
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனுடன் தேர்தல் களம் குறித்தும், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், 'பி' டீம் விமர்சனம் குறித்தும் இன்னும் பல கேள்விகள் நம் ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பாக முன்வைக்கப்பட்டது. இதோ அவரது பதில்கள்...
"தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது . முதன் முதலாக திமுக vs அதிமுக என்ற நிலை மாறி, நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 'Three Horse Race' என்று சொல்லக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
சீனாவுக்கு செக்.. அடுத்த வாரம் இந்தியா வரும் 3 ரபேல் விமானங்கள்.. விமானப்படை அதிரடி திட்டம்
இது 'Historically Significant'-ஆன தருணம். கமல்ஹாசன் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால், நானும் நிச்சயம் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். எதுவுமே திட்டமிட்டு செயல்படுத்தியது அல்ல. அரசியல் எனும் விதையை விதைத்தது அவர் தான்.
இப்போ மறந்துட்டாங்க
காமராஜர் இருந்த போது கூட திராவிட கழகங்களை மக்கள் தேர்வு செய்தது காலத்தின் கட்டாயம். தமிழ் கலாச்சாரங்களுக்கு ஒத்துவராத அச்சுறுத்தல்களை அப்போதிருந்த மத்திய அரசான காங்கிரஸ் திணிக்க முயற்சி செய்ததால், எழுந்த கோபம் திராவிட கழகங்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போது ஒரு தேவை இருந்ததால் கழகங்கள் வந்தன. ஆனால், அதன்பிறகு எதற்கு வந்தார்களோ அதை மறந்துவிட்டார்கள். சாதாரண நபர்களாக கட்சியில் சேருபவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக திரும்பிச் செல்வதை மக்கள் பார்க்காமல் இல்லை. நான் நிற்கும் சிங்காநல்லூர் தொகுதியில் கூட, திமுக எம்.எல்.ஏ வந்து பார்ப்பது கூட இல்லை என்கின்றனர் தொகுதி மக்கள். இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு என கிட்டத்தட்ட 17 கோடி நிதி உள்ளது. ஆனால், அந்த பணத்தை அவர் எங்கு செலவு செய்தார்? என்று தெரியவில்லை. ஏனெனில், அதற்கு உண்டான அத்தாட்சி என்று எதுவும் இல்லை. எனவே இந்த இரண்டு கழகங்களையும் அகற்ற வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக எழுந்த சிந்தனை இப்போது மிகவும் வலிமையாக உள்ளது. இந்த வலிமைக்கு மிக முக்கிய காரணம், மற்றொரு ஆப்ஷனாக நாங்கள் இருப்பதால் தான்.
கை சுத்தம்
மக்கள் நீதி மய்யம் மற்ற கட்சிகளுடன் கொள்கை அளவில் வேறுபடுகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுடன் கைக்கோர்க்கக் கூடாது. கை சுத்தமாக இருக்க வேண்டும். நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும், யாரைப் பற்றியும் விமர்சிக்கும் எந்தவிதமான உரிமையும் எனக்கு இருக்காது. நான் லஞ்சம் வாங்கினால், அதற்கு ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்போது, 'இவரே வாங்குறார்.. நாம ஏன் வாங்கக் கூடாது?' என்ற எண்ணம் வந்துவிடும். ஆனால், உங்கள் கை சுத்தம் என்பதை Proof செய்தால், அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். எனவே, நாமே அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். கட்சியில் அப்படி ஒரு தவறு நடந்தால் கூட உடனடியாக யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.
அட்வான்ஸ் திங்க்கிங் மக்கள்
ஊழல் ஒழிப்பு தான் பிரதான நோக்கம் என்றால், ஊழல் செய்த கட்சிகளாக கூறப்படும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடன் தானே இப்போது நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்? என்ற கேள்விக்கு, 'நீங்க தப்பு செய்யல.. ஆனா தப்பு செய்த கட்சியோடு சேர்ந்துட்டீங்க. ஆனா, அங்க போனதுக்கு அப்புறம் தவறு-ன்னு தெரிஞ்ச பிறகு வெளிய வர்றீங்க. அப்படி வருபவர்களுக்கு நாங்க ஆதரவு தானே கொடுக்கணும். திமுகவில், அதிமுகவில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள் கிடையாது. நான் போட்டியிடும் சிங்காநல்லூர் தொகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். சிங்காநல்லூரில் விவசாயத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பு சரியாக இல்லை. அதை முதலில் நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். கடந்த 2019 மக்களவை தேர்தலில், மநீம வேட்பாளர்களிலேயே என்னை அதிக வாக்குகள் பெற வைத்ததற்கு காரணம் கோவை மக்கள் தான். மக்கள் நீதி மய்யம் எதற்கு அங்கே நிற்கிறது என்பதை சீக்கிரம் புரிந்து கொள்வார்கள். இயற்கையாகவே Forward Thinking கொண்ட கோவை மக்களுக்கு என்னுடைய நன்றிகள். 'நான் Born with Silver Spoon' வகை கிடையாது. சிறிய வயதில் நிறைய அடிப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதனால் தான் கோவை மக்கள் என்னுடன் கனெக்ட் ஆகிறார்கள் என்று நினைக்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலிலும் நான் இந்த ஆதரவை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
நிச்சயம் நடவடிக்கை
வருமான வரித்துறை சோதனையை பொறுத்தவரை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை குறி வைத்து நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக மற்ற அரசியல் கட்சிகளுக்கு குறி வைப்பார்கள் என்பது உறுதி. இந்த ரெய்டுகளுக்கு 'search and surveillance' தான் சரியான வார்த்தை. எதிர்க்கட்சிகள் மீது பொறாமையில் ஒரு பொய்யான குற்றச்சாட்டு வைக்கிறதோ அல்லது வருமான வரித்துறைக்கு தொடர்ந்து பெட்டிஷன் போடப்பட்டால், இதுபோல ரெய்டு வந்து தங்கள் கடமையை அவர்கள் செய்ய நினைப்பது இயற்கை. அவர்கள் வரட்டும், பார்க்கட்டும் தப்பேயில்லை. முதலில் ஐடி அதிகாரிகள் சோதனையை முழுமையாக முடிக்கட்டும். ஒருவேளை சோதனையில் கட்சியினர் யார் மீதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால், தலைவர் கமல்ஹாசன் சொன்னது போல், நடவடிக்கை உறுதியாக இருக்கும். நாங்கள் அதில் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஆனால், வெறும் சோதனையை மட்டும் வைத்துக் கொண்டு குறை சொன்னால், இந்நேரம் மற்ற அரசியல் கட்சிகளில் பாதி பேர் அரசியலிலேயே நிற்கக் கூடாது. எலெக்ஷன் நேரத்தில் 'கன்டெய்னர்' எல்லாம் கண்டுபிடிச்சாங்க. அதையும் மீறி கூச்சமில்லாம தான வேட்பாளரா வந்து நிக்குறாங்க? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே.
ஏன் SEET?
நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்று தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது நிச்சயம் நம்ம கட்சியில் இல்லை. விண்ணப்பத்தில் கூட அதனை குறிப்பிடுவதில்லை. 'நான் தெலுங்கு பேசும் பின்னணியைக் கொண்டவன். என் மனைவி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தை நம்பி மக்கள் ஓட்டு போடப்போவதில்லை. மற்ற கட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்கள் போல் அல்லாமல், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம். அவங்களும் கொடுக்குறாங்க, நாங்களும் கொடுக்குறோம் என்று எதையும் தெரிவிக்கவில்லை. இரண்டாவது, எந்த துறையையும் நாங்கள் விட்டுவிடவில்லை. அதனால், தேர்தல் வாக்குறுதிகள் 100 பக்கங்களை தாண்டியது. Education is a State Subject. அதை மத்திய அரசு எடுப்பது தவறு. NEET போன்று நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றால், அந்தந்த மாநிலங்களின் பாடத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தானே நுழைவுத் தேர்வு இருக்க வேண்டும்? நுழைவுத் தேர்வுக்கு பயந்தவர்கள் தமிழக மாணவர்கள் அல்ல. படிக்காத பாடங்களில் இருந்து தேர்வு வைத்து எங்களுடைய வாய்ப்புகளை குறைக்கிறார்கள் என்பதே பலருடைய விமர்சனம். அதனால் தான் SEET நுழைவுத் தேர்வை அறிவித்தோம்.
கருத்துக்கணிப்பு வேஸ்ட்
நாங்கள் 'Tab' இலவசமாக தருகிறோம் என்ற தகவலில் உண்மையில்லை. அதை மீடியாவில் இருப்பவர்கள் கூட சரியாக படிக்கவில்லை என்பதே எனது பெரிய வருத்தம். நாம் சொன்னது இன்டர்நெட் கனெக்ஷன். உங்கள் பிறப்பு சான்றிதழை வாங்க நீங்க ஏன் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நிற்கணும்? ரேஷன் பொருட்களை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் பண்ணலாம் இல்லையா? பல திட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும், அதை வேண்டுமேன்றே செயல்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இவ்விரு கட்சிகளும் உள்ளன. இல்லத்தரசிகளுக்கு நாங்கள் அவர்கள் Talent-க்கு தான் ஊதியம் தருகிறோம் என்று சொன்னோம். இது வேறு, இலவசங்கள் வேறு. கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை, அந்த குறிப்பிட்ட மீடியா யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறதோ அதைப் பொறுத்துதான் ரிசல்ட் வரும். ஸோ, அவங்க சொல்றதுக்கு முன்னாடி நாமே சொல்லிடலாம், யாருக்கு அவர்கள் ஆதரவாக கருத்துக்கணிப்பு சொல்வார்கள் என்று. ஆனால், நாங்க அதிருப்தி வாக்குகளை பிரிப்போம் என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை. எத்தனை ஓட்டுகள் வந்தாலும், அது மக்கள் எங்களை புரிந்து கொண்டு வாக்களித்ததாக தான் அர்த்தமே தவிர, அது அதிருப்தி ஓட்டுகள் அல்ல. இவங்களுக்கு இத்தனை வருஷம் அடிச்சிக்கிட்டு இருந்ததற்கு இப்போ வாய்ப்பில்லாம போச்சே என்பதே கவலை. அதற்கு மக்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. அந்த இரு கட்சிகளும், 'எங்க வயித்துப் பொழப்புல கைய வைக்க வந்துட்டியா'-னு எங்களை பார்க்கின்றனர்.
ராஜாஜி கதை
கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுவது என்பது ஒரு புது முயற்சியின் அடையாளம். கோவை மக்கள் அதை வேகமாக புரிந்து கொள்வார்கள். அவரை அங்கு போட்டியிட அழைத்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதில் மகிழ்ச்சி. என்னுடைய உந்துதல் அவர் இங்கு நிற்பதற்கு முக்கிய காரணம். முதற்கட்டமாக கோவை நகரத்தை மிகச் சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதனால் தான் இருவரும் கோவையிலேயே போட்டியிடுகிறோம். கோவையை தமிழகத்திற்கே உதாரணமாக ஆக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். 'ஒருவேளை கமல் ஜெயித்தால், அவர் கோவை தெற்கு தொகுதிக்கு எம்.எல்.ஏ என்றாலும், சென்னைக்கு தானே திருப்பிப் போவார்?' என்று கேட்கிறார்கள். முன்னாள் முதல்வர் ராஜாஜி பற்றிய குறிப்பு இது. 'சட்டசபை நடக்கும் போது, எந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவர் சென்னைக்கு தான் வரவேண்டும். அதுவே, சட்டசபை இல்லாத நாட்களில் எம்.எல்.ஏ.க்கள் அவரவர்கள் தொகுதியில் தான் இருக்க வேண்டும். ஒருமுறை சட்டசபை இல்லாத நாளில், அங்கு ஒரு எம்.எல்.ஏ. இருப்பதை பார்த்த ராஜாஜி, 'இங்கே உனக்கு என்ன வேலை? நீ உன் தொகுதியில் தானே இருக்க வேண்டும்? இங்கே யாரையாவது Influence பண்ண வந்தாயா?' என்று கேட்டதாக வரலாறில் உள்ளது. அப்படித்தான் நாங்களும், சட்டசபை நடக்கும் நாட்களில் நாங்கள் யாராக இருந்தாலும் சென்னையில் தான் இருப்போம். சட்டசபை இல்லாத நாட்களில் அவரவர் தொகுதிகளில் இருப்போம்.
அப்போ கண்ணுக்கு தெரியலையா?
எங்களை 'பி' டீம் என்று சொல்வது திமுக தான். ஏனெனில், மக்கள் அவர்களுக்காக ஓட்டு போடுவதில்லை. பாஜகவை நிராகரிக்க போடும் ஓட்டுகள் தான் அவர்களுக்கு வருகிறது. ஸோ, அதுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லி கெடுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டு. பாஜக போட்டியிடும் அதே தொகுதியில் தான் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார். இதைவிட என்ன வேண்டும் நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம் என்பதற்கு? பாஜக இங்கு ஒரு இடத்தில் கூட வெல்லாது. தமிழகம் அதற்கு இடம் கொடுக்காது. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகம் ஆதரவு கொடுக்காது. காங்கிரஸ் குறைந்தபட்சம் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்பது ஆறுதல். ஆனால், யாருடன் கூட்டணி வைப்பது என்று தெரியாமல், திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது பெரிய குற்றம். கமல்ஹாசன் அவர்கள் ஜெயித்து வந்து போடும் முதல் கையெழுத்து லோக்பால் மசோதாவில் தான். அதேபோல், பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதும் எங்களது முதற்கட்ட பணிகளாக இருக்கும். கமல்ஹாசன் நடிகர் என்று சொல்வது அவர்களின் பயத்தையும், பதட்டத்தையும் காண்பிக்கிறது. அதிமுக தலைமை சினிமாவில் இருந்து வரவில்லையா? திமுகவில் யாரும் சினிமாவில் இருந்து வரவில்லையா? அப்போ மட்டும் அவர்களுக்கு இந்த விமர்சனம் தெரியவில்லையா?" என்றார்.