சாமியார் வீட்டில் ஐம்பொன் சிலை பறிமுதல்! வீடியோவை பார்த்ததும் போலீசுக்கு ஷாக்.. குலுங்கிய கோவை!
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் உக்கடம் அருகே சாமியார் ஒருவரின் வீட்டிலிருந்து ஐம்பொன் சிலையொன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென இன்று பிற்பகல் சாமியார் பாஸ்கர சுவாமிகள் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டதில் இந்த சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டது முருகர் சிலை என்றும் 4 அடி கொண்ட இந்த சிலைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காவல்துறையினர் பாஸ்கர சுவாமிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலை பறிமுதல்
சமீப நாட்களாக சிலைகள் கடத்தப்படுவதாகவும், இவ்வாறு கடத்தப்பட்ட சிலைகள் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோவை மாவட்டம் உக்கடத்தின் செல்வபுறம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள பாஸ்கர சுவாமிகள் எனும் சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தானே செய்த சிலை
இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அப்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 200 கிலோ எடையுடைய 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகர் சிலை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். சிலைக் கடத்தல் குழுவுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகித்துள்ளனர். ஆனால் பாஸ்கர சுவாமிகள் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். மேலும், இந்த சிலையை தானே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக நிர்வாகி
அதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக யூடியூபில் சிலை தயாரிப்பது குறித்து தான் பார்த்த வீடியோவை காட்டியுள்ளார். ஆனால் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் பாஸ்கர சுவாமிகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த பிப்ரவரி மாதம் 7 பழங்கால சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயன்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிலை பதுக்கல்
அதேபோல கடந்த மாதம் 4ம் தேதி நெல்லையில் 5 ஐம்பொன் சிலைகள் நடராஜன் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதிரடி சோதனை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிலைகளை மீட்டு நடராஜனை கைது செய்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்று சிலை பதுக்கல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications