கோவையில் அதிமுக உண்ணாவிரதம்.. பக்கத்து கடையில் விற்று தீர்ந்த பஜ்ஜி, வடை.. நிழலாடிய மன்னன் பட காமெடி
கோவை: கோவையில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஒரு பக்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் அருகே இருந்த டீக்கடையில் பஜ்ஜி, சொஜ்ஜி, வடை வியாபாரம் களைகட்டியது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் கோவையிலும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. இங்கு சாலை வசதிகள் சரியாக இல்லை என்பதை கண்டித்து குண்டும் குழியுமான சாலைகளால் நடக்கும் விபத்துகளுக்கு முடிவு கட்ட தரமான சாலைகளை அமைக்கக் கோரியும் மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
திமுகவுக்கு நெருக்கடி.. கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம்.. துவக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி
யார் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கலந்து கொண்டார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோவையை திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என திமுக வியூகம் நடத்தி வருகிறது. இதற்காக கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தோல்வி
கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கோவை மாநகராட்சியை கைப்பற்ற முயற்சித்து தோல்வியையே சந்தித்தது. எனவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை அதிமுகவின் கோட்டை என்பதை தக்க வைத்துக் கொள்ள இந்த போராட்டத்தை பெரிய அளவில் நடத்த அதிமுக முடிவு செய்தது. இதற்காக இந்த போராட்டத்தை உண்ணாவிரத போராட்டமாக அறிவித்தது.
முன்னாள் அமைச்சர்கள்
இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் வேலுமணி பேசுகையில் அதிமுக ஆட்சியில் கோவையில் சாலை, மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
புதிய திட்டங்கள்
கோவைக்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவை மாவட்டம் மொத்தமாக புறக்கணிப்படுகிறது என பேசினார். சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பால் விலை, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
கிடப்பில் போட்ட திமுக அரசு
அது போல் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இது உண்ணாவிரத போராட்டமாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திடீரென சூதான பஜ்ஜி, போண்டாவின் வாசம் அதிமுகவினரின் மூக்கைத் துளைத்தது. இந்த வாசனைக்கு மயங்கிய அதிமுகவினர் வாசனையை பிடித்துக் கொண்டே டீக்கடைக்குச் சென்றனர். அங்கு மசாலா டீ, இஞ்சி டீ, பஜ்ஜி, போண்டா, மசால் வடை, பிஸ்கெட் என புகுந்து விளையாடினர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது.
உண்ணாவிரதம்
அதாவது உண்ணாவிரதத்திற்கு வந்த அதிமுகவினர் டீக்கடையில் குவிந்ததால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. ஒரு வேளை பஜ்ஜி, போண்டா, மசால் வடை எல்லாம் உணவு வகையில் வராது என நினைத்துக் கொண்டிருப்பார்களோ என அங்கிருந்த பொதுமக்கள் பேசிக் கொண்டனர். இன்னும் சிலர் மன்னன் படத்தில் ரஜினிகாந்த், கவுண்டமணி ஆகியோர் ஊழியர்களுடன் சேர்ந்து விஜயசாந்தியின் அலுவலக முடிவை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவர்.
உண்ணாவிரதம்
ஓனர் விஜயசாந்தியின் வீட்டருக்கே ஒரு பந்தலில் உண்ணாவிரதம் நடந்த போது மனோரமா வந்து மைக்கில் அவர் தயார் செய்த அசைவ உணவுகளை அறிவிப்பார், இந்த உணவால் "சபலமடையும்" கவுண்டமணியை அந்த இடத்தை விட்டு செல்ல விடாமல் மற்ற ஊழியர்களும் ரஜினியும் கோழியை அமுக்குவது போல் அமுக்கி உட்கார வைத்துவிடுவார்கள். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என கவுண்டமணி அவர் ஸ்டைலில் அழுவார் ! அந்த காட்சிகளே அப்பகுதி மக்களின் கண்களில் நிழலாடியது.