வருகிறது சீனாவின் "உளவு" கப்பல்! இலங்கையை காதில் வாங்காத சீனா.. இந்தியாவின் அழுத்தம் என்னாச்சு
கொழும்பு: சீன ராணுவத்திற்குச் சொந்தமான கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டுள்ள நிலையில், இது குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மோசமான சூழல் நிலவி வருகிறது. அங்கு நிலவும் பொருளாதார சூழல் காரணமாக உணவு, மருந்து பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த பொருளாதார அழுத்தம் அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்தது. சில மாதங்களில் மட்டும் இரு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
'அதிகரிக்கும் கொரோனா'. . பரிசோதனையை அதிகப்படுத்துங்க. . 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்!
இலங்கை
இலங்கையை நிலையைச் சீர்செய்ய இப்போது இருக்கும் அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதுவரை இந்தியா மட்டுமே இலங்கைக்கு இந்த இக்கட்டான சூழலில் உதவி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை உச்சத்தில் இருந்த போது, இந்தியா தான் டீசல் கொடுத்து உதவியது. அதேபோல தமிழக அரசும் கூட இலங்கை மக்களுக்குத் தனியாக உதவி பொருட்களைக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.
சீனா
இலங்கை நிலை இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், இடையில் சீனாவின் நடவடிக்கைகள் வேறு ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முதலில் சீனா தைவானைச் சீண்டியது. அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தை எதிர்த்து, தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது பெரிய அளவில் போர்ப் பயிற்சிகளைச் செய்தது.
ராணுவ கப்பல்
இதற்கு அமெரிக்கா தொடங்கி பல்வேறு நாடுகளும் கடும் கண்டத்தைத் தெரிவித்து இருந்தது. இந்தச் சூழலில் சீனா ராணுவத்திற்குச் சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. இதற்குக் கடந்த ஜூலை 12ஆம் தேதி தான் அப்போதைய இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இப்போது புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ள நிலையில், சீன கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்தியா
இந்தியாவும் கூட சீன ராணுவ கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் இந்த கப்பலைச் சீனா ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இதன் மூலம் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியுமாம். இலங்கையில் இருந்து கொண்டு இந்தியாவைக் கண்காணிப்பதே சீனாவின் திட்டம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு இந்தியாவும் இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது.
இலங்கை வேண்டுகோள்
இதனால் வேறுவழியின்றி, அந்த சீன கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு இலங்கை கடிதமும் எழுதி இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கையின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து இருந்தனர். இந்தச் சூழலில் சீன கப்பல் குறித்து சில ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கண்டுகொள்ளவில்லை
அதாவது இலங்கையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, சீன கப்பல் இலங்கையை நோக்கித் தொடர்ந்து பயணித்து வருவதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. 23,000 டன் எடையுள்ள யுவான் வாங் 5 கப்பல் இன்று காலை 10 மணியளவில், இந்தோனேசியாவின் கடற்கரையிலிருந்து மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கிப் பயணிக்கிறது. இது இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அம்பாந்தோட்டையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சீனா பதில்
சீனா இந்த கப்பலை ராணுவ பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் என்பதாலேயே இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சீனா பதில் அளித்துள்ளது. அதாவது, "சீனாவின் அறிவியல் நடவடிக்கைகளை நியாயமாகப் பார்க்கவும். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பைத் தொந்தரவு செய்வதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.