கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்.. ரணிலுக்கு நெருக்கடி- மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்?
கொழும்பு: தாய்லாந்தில் வீட்டு சிறையில் இருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை கொழும்பு திரும்புகிறார். இதனால் இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதாரப் பேரழிவை சீரமைக்காமல், மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியவர் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவு, பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருந்தார் கோத்தபாய. தற்போது தாய்லாந்தில் குறுகிய கால அனுமதியுடன் வீட்டுச் சிறையில் உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.
கோத்தபாயவுக்கு உலகின் எந்த ஒரு நாடும் அடைக்கலம் தர முன்வரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கோத்தபாய. இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.
மேலும் கோத்தபாயவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 8 அடுக்கு பாதுகாப்புகளுக்கு ரணில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கோத்தபாயவுக்கு எதிராக எந்த ஒரு சிறு ஆர்ப்பாட்டமும் நடத்தவிடக் கூடாது என்பதில் ரணில் முனைப்பாக உள்ளார்.
இதனிடையே இலங்கையில் எந்த ஒரு மக்கள் கிளர்ச்சியும் நடைபெறாத வகையில் ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம், அடக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை உள்ளிட்ட இடங்களைக் கைப்பற்றியவர்கள், காலி முகத் திடல் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரணில், ஜனாதிபதியான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டிவிட்டது.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளார். இலங்கை திரும்பும் அவர், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது ஆதரவு எம்.பி. ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து நியமன எம்.பியாகி பிரதமராவது என கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம். இதற்கு ரணில் விக்கிரமசிங்கே முழுமையான ஆதரவு தெரிவித்திருக்கிறாராம்.
அதேநேரத்தில் கோத்தபாய இலங்கைக்கு மீண்டும் திரும்பி அரசியலில் ஈடுபட்டால் மக்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது. தற்போதைய ரணில் அரசாங்கம், அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டால் இலங்கையில் ரத்த ஆறுதான் மூடும் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.