119 இடம்பெயர் தொழிலாளர்களை பலி கொண்ட கொரோனா லாக்டவுன்
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் நாடு முழுவதும் 119 பேர் இடம்பெயர் தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டிருக்கிறது.
கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் இன்று மே 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 4-வது கட்ட லாக்டவுன் புதிய முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த லாக்டவுன் காலத்தில் மிகப் பெரிய துயரத்தினை தேசத்தின் அடித்தட்டு மக்கள் சொந்த வாழ்விடங்களில் எதிர்கொண்டிருக்கின்றனர். ஆனால் போகவும் வழியில்லாமல் வாழவும் பாதை தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் தவிக்க விடப்பட்டனர் இடம்பெயர் தொழிலாளர்கள்.
சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் பிழைக்க போன இடத்தில் கிடைத்ததை தின்று வாழ்க்கையை கழித்தவர்கள் ஒரு பக்கம்.. வருமானத்துக்கு வழியில்லை.. இனியும் வாழ்வதும் முடியாது என்பதற்காக சொந்த ஊரை நோக்கி நடந்தும் சைக்கிளிலும் கிடைத்த வாகனங்களிலும் பயணித்தவர்கள் பலர்.
இப்படி நடைபயணமாக வந்தவர்கள், சைக்கிளில் வந்தவர்கள் நடுவழியில் விபத்துகளில் சிக்கி மாண்டு போகிற செய்திகள் இப்போதுதான் வெளி உலகத்துக்கு தெரியவருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக கொத்து கொத்தாக நிகழ்ந்த மரணங்கள்தான் ஊடக வெளிச்சங்களில் பட்டிருக்கின்றன.
பசியாலும் பட்டினியாலும் நடுவழியில் மாண்டு போன மனித உயிர்கள் எத்தனையோ! இந்த தேசத்தின் குடிமகன், குடிக்க தண்ணீரும் இல்லாமல் சுருண்டு விழந்து செத்து போன சம்பவங்கள் எத்தனையோ.. ஏதோ ஒருவகையில் இதுவரையில் 119 இடம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக பதிவாவது இருக்கிறது என்பதுதான் ஆறுதல்












Click it and Unblock the Notifications