எல்லையில் சீனா அத்துமீறியதால் இருதரப்பிலும் உயிரிழப்புகள்- மத்திய வெளியுறவு அமைச்சகம்
டெல்லி: லடாக் எல்லையில் தற்போதைய நிலையை மாற்ற சீனா ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சித்ததால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனா தரப்பில் 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை ராணுவமும் சீனா ஊடகங்களும் உறுதி செய்தன.

இந்த நிலையில் எல்லை நிலவரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
லடாக் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்தியா- சீனா இடையேயான பதற்றத்தைத் தணிக்க ராணுவ மற்றும் ராஜதந்திர வழிகளில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6-ந் தேதியன்று மூத்த அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பதற்றத்தை தணிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
ராணுவ தளபதிகள் நிலைலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறிய நிலையில் ஜூன் 15-ந் தேதி இரவு இருதரப்பில் மோதல் நிகழ்ந்துள்ளது. தற்போதைய எல்லை நிலைமையை சீனா ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சித்த காரணத்தால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனா ஒப்பந்த்ததை மதித்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அனைத்து நடவடிக்கைகளையுமே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்குள்தான் மேற்கொண்டு வருகிறது. இதேபோல்தான் சீனாவும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது. அதேநேரத்தில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications