கொரோனா தாக்கியவர் தந்த பர்த் டே பார்ட்டி .. கலந்து கொண்ட குழந்தைகள்.. நொய்டாவில் மூடப்பட்ட பள்ளி!
டெல்லியில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழாவில் நிறைய குழந்தைகள் கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழாவில் நிறைய குழந்தைகள் கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நொய்டாவில் தற்போது ஒரு பள்ளி மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
Recommended Video
யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இதன் வேகம் குறைந்தாலும் மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகில் மொத்தம் 70 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3118 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 90012 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
டெல்லி எப்படி
இந்த வைரஸ் ஹைதராபாத்தில் ஒருவருக்கும் பரவி உள்ளது. இவர் ஹாங்காங்கில் பணியாற்றி வந்தார். அங்குதான் இவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அதன்பின் இவர் பெங்களூர் வந்துவிட்டு, பின் ஹைதராபாத் சென்றுள்ளார். இவர் பேருந்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பெங்களூரில் தற்போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கர்நாடக அரசு இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறது.
வேறு என்ன
இன்னொரு பக்கம் டெல்லியில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த வாரம் இவர் டெல்லி வந்துள்ளார். இத்தாலியில் அதிக அளவில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. ஆனால் இவர் நேரடியாக இத்தாலியில் இருந்து டெல்லி வராமல், ஆஸ்திரேலியா சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லி வந்துள்ளார். இதனால் இவரை டெல்லி விமான நிலையத்தில் சோதனை செய்யாமல் அப்படியே அனுப்பி இருக்கிறார்கள். இவர் அதன்பின் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
நொய்டா என்ன
கொரோனா தாக்கிய இவர் நொய்டாவில் வசிக்கிறார். இவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்தான் இவரின் குழந்தைகள் படிக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் தனது குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளார். அப்போது அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலர், அவர்களின் பெற்றோர் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கும் நோய் தாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பெரிய அச்சம்
இதனால் நொய்டாவில் உள்ள அந்த பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது. எல்லா மாணவர்களின் ரத்த மாதிரியும் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ரத்த மாதிரி உடனே சோதிக்கப்படும். மூன்று நாட்களுக்கு அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் உடன் தொடர்பு கொண்டு இன்னொரு பள்ளியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை நொய்டாவில் உள்ள அந்த பள்ளியும் மூடப்பட உள்ளது.