வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும்...அபியாஸ் சோதனை வெற்றி!!
டெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ ) மூலம் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும் வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் அபியாஸ் வாகன சோதனை வெற்றிகரமாக ஒடிசாவில் இருக்கும் பாலசோரில் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டு இருக்கும் செய்தியில் இந்த அபியாஸ் வாகனம் ட்ரோன் போன்றது. இதை தேவைப்பட்டால், இலக்கை தாக்கி அழிக்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
பாராட்டு
இதற்கு பாராட்டு தெரிவித்து இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''அபியாஸ் சோதனை வெற்றியின் மூலம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான இலக்காக இதை எடுத்துக் கொள்ளலாம். இந்த சாதனைக்கு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும், இந்த வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாவது
இந்த அபியாஸ் வாகனம் இரண்டாவது முறையாக கடந்த செவ்வாய் கிழமை சோதித்துப் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு 2019 மே மாதம் சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது அனைத்து தூரங்களிலும் சோதனை நடத்திப் பார்க்கப்பட்டுள்ளது.
ஒலி
வானில் 5 கி. மீட்டர் உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்டது. ஒலியை விட பாதி வேகத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. செய்திகள் மற்றும் படங்களை அனுப்புவதற்கான 2ஜி திறன் பெற்றுள்ளது.
எஞ்சின்
முழுவதும் தானியங்கியாக செயல்படும். காஸ் மற்றும் எரிவாயு இரண்டிலும் இயங்கும் வகையில் எஞ்சின் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுக்கு விமான கட்டுப்பாட்டு கணினியைப் பயன்படுத்துகிறது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது