ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா? ஆய்வாளர்கள் கூறும் புது தகவல்
டெல்லி: மனிதன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுறுத்தலாக உள்ளது. அதே வேளையில், இது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரை அதிகப்படியானதாக இருக்கலாம் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவர் வாக்கு உள்ளது.. உலகம் மட்டுமல்ல.. மனிதன் உயிர்வாழ்வதற்கும் நீர் இன்றியமையாது.
மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனதுதான். சாப்பிடாமல் கூட சில நாட்கள் உயிர்வாழ்ந்து விட முடியும். ஆனால், தண்ணீர் இன்றி வாழ முடியது.
தண்ணீர் அருந்துவதின் அவசியம்
மனித உடல் உறுப்புகள் இயங்குவதற்கு போதிய நீர்ச்சத்து அவசியம். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து மிகவும் அவசியம் ஆனது ஆகும். போதுமான அளவுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் சூடு கட்டுப்பாடான அளவில் இருக்காது. நமது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆனது என்று நாம் அனைவரும் அறிந்ததே. உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்து செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது மட்டும் இன்றி உணவு செரிமானத்திற்கும் தண்ணீர் இன்றியமையாதது.
2 லிட்டர் தண்னீர் குடிப்பது
மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றன. ஒருநாளைக்கு சராசரியாக 8 (2 லிட்டர்) கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்னீர் குடிப்பது அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,600 பேரிடம் ஆய்வுகள்
சுற்றுச்சுழல் மற்றும் மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள காரணிகளை அடிப்படையாக கொண்டு நடத்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் journal Science-ல் வெளியாகி இருக்கிறது. பூமியின் பருவ நிலை மாறுபாடு மனிதனின் நீர் தேவையை மேனேஜ் செய்வதை எந்த அளவுக்கு கடினமானதாக மாறும் என்பதையும் இந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 26 நாடுகளில் 5,600 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பதே போதுமானது
அனைத்து வயதிலும் உள்ள நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் படியே ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதே அதிகப்படியானது என்று கூறப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பதே போதுமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், வெப்பமான சூழல் மற்றும் உயரமான பகுதிகளில் வசிப்பவர்கள், தடகள வீரர்கள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு நீரின் தேவை அளவு அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
வயதுக்கு ஏற்றார்போல்
20-35 வயதில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4.2 லிட்டர் குடி நீரும், 20-40 வயது வரம்பில் உள்ள பெண்கள் நாள் ஒன்றுக்கு 3.3 லிட்டர் தண்ணீரும் அருந்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரும் பேராசியருமான ஜான் ஸ்பீக்மேன் கூறியதாவது: நாம் குடிக்க வேண்டிய நீரின் அளவு என்பது நாம் குடிநீராக அருந்துவதும் உணவு மூலமாக கிடைக்கும் தண்ணீரின் அளவுக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.
தேவைக்கு ஏற்ப வேறுபடுகிறது
இதில், மக்கள் தாங்கள் அருந்திய உணவு குறித்த சரியான தரவுகளை அளிப்பதில்லை என்பதால் இந்த கணக்கீடு சிறிய அளவில் தவறாக உள்ளது. எனவே தேவைப்படும் நீரின் அளவை நீங்கள் அதிகப்படியாக மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது" என்றார். தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொரு நபரின் தேவைக்கு ஏற்ப வேறுபடுகிறது என்றும் ஆய்வில் தெரியவது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
3.2 லிட்டர் மட்டுமே
அதேபோல், 20-வயதுகளில் உள்ள ஒருவருக்கு தண்ணீரை உட்கிரகித்துக்கொள்ளும் அளவு 4.2 லிட்டர் என்று ஒருநாளைக்கு இருந்தால் அவர் 4.2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையாக தேவைப்படும் நீரின் அளவு 3.2 லிட்டர் மட்டுமே என்று இருக்கும். ஏனெனில் பெரும்பலான உணவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெறும் உணவை உட்கொள்வதால் மட்டுமே கணிசமான அளவு தண்ணீர் கிடைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.