சீன எல்லையில் திடீரென அதிகரிக்கும் 'டிரோன்' நடமாட்டம்.. பதிலடி கொடுக்கும் இந்தியா.. மீண்டும் பதற்றம்
டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள எல்லையில் சீனா தனது டிரோன் மற்றும் ராணுவ நடமாட்டத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்கு பின் நிலைமை மோசமானது.
அதைத் தொடர்ந்து இரு தரப்பும் எல்லையில் வீரர்களை குவிக்க தொடங்கின. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது..
இளையராஜா நல்லா மியூசிக் போட்டிருந்தாலும்.. நான்தான் திறமையாக வாயசைத்தேன்.. தெலுங்கு நடிகரின் காமெடி!
சீன ராணுவம்
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் பரஹோட்டி பகுதியில் அமைந்துள்ள எல்லையில் சீன ராணுவம் தனது நடவடிக்கைகளை அதிகரித்தது. கடந்த சில நாட்களாகவே பரஹோட்டி பகுதியில் சுமார் 35 வீரர்கள் சுற்றியிருந்த பகுதிகளை ஆய்வு செய்து, சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. சீன ராணுவம் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயம் விதிகளை மீறியுள்ளதாகவே அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ-க்கு தெரிவித்தார்.
தலைமை தளபதி
அதேநேரம் சீன படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் இருந்தும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ தெரிவித்துள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் தனது செயல்பாடுகளை தொடங்கியிருந்தாலும் கூட, பல ஆண்டுகளாக இந்தியா இங்கு தான் செயல்பட்டு வருகிறது என்றும் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய காலங்களில்தான் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மத்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஒய் டிம்ரி ஆகியோர் நிலைமையை கண்காணிக்க எல்லை பகுதிகளில் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடதக்கது.
டிரோன்
பரஹோட்டி பகுதியில் சீன விமானப் படையின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ட்ரோன்கள் நடமாட்டம் அப்பகுதியில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய ராணுவம் கூடுதல் வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதேபோல இந்திய எல்லையில் இருக்கும் சினியலிசாண்ட் ஃபார்வர்ட் லேண்டிங் தளத்திலும் இந்திய ராணுவம் தனது செயல்பாடுகளை அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தை
முன்னதாக கடந்த வாரம் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் சமயத்தில் இந்திய சீன வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பது இரு நாட்டின் உறவுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று என்பதால் மூத்த ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது உத்தரகண்ட் எல்லையில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளது.