டிஜிட்டல் ரூபாய் ஓகே! ஆனா இதுக்கும் கூகுள்பே போன்ற ஆப்ஸுக்கும் என்ன வித்தியாசம்! எளிய விளக்கம் இதோ
டெல்லி: இப்போது சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதற்கும் கூகள்பே போன்ற செயலிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
உலகெங்கும் பிளாக்செயினை மையமாகக் கொண்ட கிரிப்டோ கரன்சிகளின் புழக்கம் அதிகரித்தது. இருப்பினும், எந்தவொரு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இது இயங்குவதால் உலக நாடுகள் கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிக்கவில்லை.
அதேபோல உலகின் சில நாடுகள் கிரிப்டோ கரன்சிகள் போல தாங்களே அதிகாரப்பூர்வ இ கரேன்சியையும் வெளியிடத் தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கியும் இ கரேன்சியை வெளியிட்டிருந்தது.
பர்சை தூக்கிப் போடுங்க.. டிஜிட்டல் ரூபாயில் இவ்வளவு பயன்களா? யூஸ் பன்றது எப்படி? விலைக்கு வாங்கலாமா?
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி முதலில் இந்த இ ரூபாயை மொத்த விற்பனையில் கடந்த நவ. 1ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கடந்த டிச.1ஆம் தேதி சில்லறை வர்த்தகத்திலும் இது அறிமுகமாகி உள்ளது. முதற்கட்டமாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்டமர்களுடன் 4 நகரங்களில் மட்டும் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இது மெல்ல இந்தியா முழுக்க வெளியிடப்படும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்த இ ரூபாய் என்றால் என்ன என்ற சந்தேகமும் பலருக்கும் உள்ளது.
சில்லறை வர்த்தகம்
இப்போது நாட்டு மக்கள் பலரும் கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ முறையை அதிகம் நம்பியுள்ளனர். இதன் மூலம் மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் அனுப்ப முடிகிறது. எனவே, இந்த முறையில் தான் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் இந்த செயலிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள டிஜிட்டல் ரூபாய்க்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. வாங்கப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன என்பதில் சின்ன ரிகேப்!
டிஜிட்டல் ரூபாய்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாய் என்று அழைக்கப்படும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் என்று சொல்லலாம். அதாவது டிஜிட்டல் ரூபாய் என்பது பணத்தின் மின்னணு வடிவமாகும். ஒரு டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு எப்போதும் புழக்கத்தில் இருக்கும் ஒரு ரூபாயின் மதிப்பாகவே இருக்கும். அதாவது கிரிப்டோ கரேன்சிகளை போல டிஜிட்டல் ரூபாய் மதிப்பு பெரியளவில் மாறாது.
என்ன வித்தியாசம்
இதற்கும் கூகுள்பே போன்ற செயலிகளுக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. கூகுள்பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் UPI என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த UPI என்பது பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் ஒரு தொழில்நுட்பம் தான். அதேநேரம் டிஜிட்டல் ரூபாய் என்பது, புழக்கத்தில் இருக்கும் ரொக்கத்தின் மற்றொரு வடிவமாகும். UPI மூலம் வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் ரொக்கத்தைத் தான் பரிவர்த்தனைகளைச் செய்கிறோம்.
தொழில்நுட்பம் மட்டுமே
அதாவது யுபிஐ அடிப்படையில் இங்கும் கூகுள்பே உள்ளிட்டவை பணத்தைப் பரிமாற்ற உதவும் தொழில்நுட்பம் மட்டுமே! அதேநேரம் டிஜிட்டல் கரென்சி என்பது நாணயத்தில் டிஜிட்டல் வடிவம். இந்த டிஜிட்டல் ரூபாயை வாங்கப் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி முதல் வங்கிகளின் செயலி அல்லது இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இது இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்கள் உடன் சோதனை அடிப்படையிலேயே செய்யப்படுவதால் இதை எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி தெளிவாக வெளியிடவில்லை.
எதற்குப் பயன்படும்
இப்போது, டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தி ரொக்கத்தின் புழக்கத்தைக் குறைப்பதே ரிசர்வ் வங்கியின் நோக்கமாகும். இப்போது பணத்தை பிரிண்ட் செய்து, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அதிகம் செலவாகிறது. இவை எல்லாம், டிஜிட்டல் ரூபாயால் குறையும். ரொக்கம் புழக்கத்தில் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் டிஜிட்டல் ரூபாய் தான் அடித்தளம். இருப்பினும், அந்த நிலையை அடைய நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.