நாடு ஒரு மாதிரி யோசித்தால்.. காங்கிரஸ் மட்டும் வேறு ரூட்டில் போகிறது.. 'சீனியர்' மணிஷ் திவாரி குட்டு
டெல்லி: "இந்தியாவும், காங்கிரஸும் ஒன்றுக்கொன்று முரணாக சிந்திக்க தொடங்கிவிட்டன" என்று அக்கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரி கவலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத் நேற்று அதிரடியாக கட்சியில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு காங்கிரஸில் இருந்த ஆலோசனை நடைமுறைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் சுமத்தியுள்ளார்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த விலகலானது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் உள்ளிட்ட 23 காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் முக்கியமான கடிதத்தை அளித்தோம். அதில் காங்கிரஸின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதேபோல, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தியின் இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தி இருந்தால் கூட இன்று இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது.
இப்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் போது, இந்தியாவும் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று முரணாக சிந்திக்க தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. 1885-ம் ஆண்டு உருவான காங்கிரஸுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக கட்சியை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. இவ்வாறு மணீஷ் திவாரி கூறியுள்ளார்.