பாஜக மேலிடம் அதிரடி? லோக்சபா தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? எந்த மாநிலம் தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தலில் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்து வரும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. லோக்சபா தேர்தலானது ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை நடத்தப்படக் கூடும். இதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வேட்பாளர்கள் தேர்வில் பாஜக பிஸி: லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியும் தயாராகி வருகிறது. பாஜகவைப் பொறுத்தவரை 2019 தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. அத்துடன் ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் சிலரையும் லோக்சபா தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம் பாஜக. தற்போது ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இருவரும் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக 1 இடத்திலாவது வெல்லுமா? என்பதுதான் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் முன்வைத்து வரும் கேள்வி.
லோக்சபா தேர்தலில் பாஜக சீனியர் ராஜ்யசபா எம்பிக்கள்- தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் போட்டி?
தட்சிண கன்னடாவில் நிர்மலா சீதாராமன்?: இதனால் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இருவரையும் பாஜக அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரே ஒரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம் பாஜக மேலிடம். பாஜக செல்வாக்கு அதிகமாக உள்ள தட்சிண கன்னடா லோக்சபா தொகுதியில் நிர்மலா சீதாராமனை களமிறக்கலாம் என கணக்குப் போடுகிறதாம் பாஜக. 2009-ம் ஆண்டு முதல் 3 லோக்சபா தேர்தல்களும் பாஜகவின் நளின் குமார் கட்டீல் இத்தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்தவர் நளின் குமார் கட்டீல். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் நளின் குமார் கட்டீல் தமது பதவியை ராஜினாமா செய்தார். 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜக சரமாரியாக 50% வாக்குகளைப் பெற்ற தொகுதி என்பதால் தட்சிண கன்னட லோக்சபா தொகுதியில் நிர்மலா சீதாராமன் எளிதாக வெல்ல முடியும் என நினைக்கிறதாம் பாஜக மேலிடம்.
தமிழகத்திற்கு எதிராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்.. என்ன செய்யப்போகிறது தமிழக பாஜக?
உத்தர கன்னடாவில் ஜெய்சங்கர்?: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கர்நாடகாவின் உத்தர கன்னடா தொகுதியை ஒதுக்கலாம் என்கிற யோசனையில் உள்ளதாம் பாஜக. இத்தொகுதியிலும் 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை பாஜகவின் அனந்தகுமார் ஹெக்டேதான் எம்பியாக இருக்கிறார். உத்தர கன்னடா தொகுதியில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 68.15% வாக்குகளை அள்ளியது. காங்கிரஸ் கூட்டணியில் ஜேடிஎஸ் போட்டியிட்டு 26.56% வாக்குகளைப் பெற்றது. தற்போது ஜேடிஎஸ், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. 2014 தேர்தலில் பாஜக 54.64% வாக்குகளையும் காங்கிரஸ் 40.58% வாக்குகளையும் இத்தொகுதியில் பெற்றிருந்தன. இதனால் உத்தர கன்னடா தொகுதியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிட்டால் எளிதாக வெற்றியை அறுவடை செய்யலாம் என திட்டமிடுகிறதாம் பாஜக.
பெங்களூரில் 2 தொகுதிகள்: உத்தர கன்னடா லோக்சபா தொகுதியைவிட பாஜகவின் கோட்டைகளில் ஒன்றான பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் ஜெய்சங்கர் நிறுத்தப்பட்டால் மிக மிக எளிதாக வென்றுவிட முடியும் என்கிற ஒரு கணக்கும் உள்ளது. இந்த பட்டியலில் பெங்களூர் மத்திய தொகுதியும் உள்ளது. பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி, 1996 முதல் தற்போது வரை பாஜக வசம்தான் உள்ளது. பாஜக மூத்த தலைவர் அனந்த குமார் அவருக்கு தற்போது தேஜஸ்வி சூர்யா பாஜக எம்பியாக உள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியில் பிசி மோகன், 2009 முதல் தற்போது வரை பாஜக எம்பியாக உள்ளார். இந்த 3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிடக் கூடும். அண்மைகாலமாக பெங்களூர் நகருக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அடிக்கடி வருகை தருகிறார். பெங்களூர் நகருக்கும் தமக்குமான உறவுகளைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications