செப்.14-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
டெல்லி: கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முதன் முறையாக செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு சபைகளுமே மார்ச் 23-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் லாக்டவுன் அமலாக்கப்பட்டது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்தபோதும் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. சமூக இடைவெளியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜிடிபி சரிவு- மோடி அரசுக்கு அவமானம்... தவறுகளை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்... ப. சிதம்பரம் 'டோஸ்'
இதற்காகவே நாடாளுமன்ற இரு சபைகளிலும் இருக்கைகள் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 14-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இக்கூட்டத் தொடரில் வரலாறு காணாத பொருளாதார சரிவு, சீனாவின் ஊடுருவல் முயற்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும்.