உண்மை கண்டறியும் சோதனை: வசமாக சிக்கும் அப்தாப்.. முக்கிய தடயங்கள் சிக்கியதாக போலீஸ் தகவல்
டெல்லி: ஷர்த்தா உடலை 35 துண்டுகளாக வெட்ட பயன்படுத்தப்பட்ட 5 கத்திகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தடயவியல் சோதனைக்காக இந்த கத்திகள் ஆய்வகத்திற்கு அனுப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் கொடூர கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அப்தாப்பிடம் நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
டெல்லியில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து விட்டு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தனது காதலியான ஷர்த்தாவை அப்தாப் அமீன் (வயது 28) என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வழக்குகளில் ஒன்றாக மாறியது.
தமிழகத்தின் வேதாரண்யம்... இலங்கையில் இருந்து குறிவைக்கும் சீனா, பாக்... முல்லைத்தீவில் காலூன்ற சதி!
3 வாரமாக உடலை ப்ரிட்ஜில்
ஷ்ரத்தாவை கொலை செய்த அவரது ஆண் நண்பர் அப்தாப் அமீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர வைத்து வருகிறது. ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு அவரது உடலை வைப்பதற்காக புதிதாக ப்ரிட்ஜ் ஒன்றை வாங்கிய அப்தாப், அதில் மூன்று வாரங்களுக்கு ஷ்ரத்தாவின் உடலை வைத்துள்ளார். அதன் பிறகே உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வீசியிருக்கிறார்.
உண்மை கண்டறியும் சோதனை
கொலையை மறைப்பதற்காக அப்தாப் செய்த காரியங்கள் கிரைம் திரில்லர் சினிமாக்களை மிஞ்சும் வகையில் அமைந்து இருந்தது. தற்போது டெல்லி போலீசாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப் அமீனிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதன்படி, நேற்று அப்தாப் அமீன் பூனவாலாவிடம் டெல்லியில் உள்ள தடயவியல் லேப்பில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
8 மணி நேரம் துருவி துருவி விசாரணை
புதன்கிழமை அப்தாப்பிற்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சோதனை நடத்தப்படவில்லை. நேற்று சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. இந்த உண்மை கண்டறியும் சோதனையின் போது, அப்தாப்பிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு விஷயங்களை விசாரித்தனர். ஷ்ரத்தவை கொலை செய்தது ஏன்? முன்கூட்டியே திட்டமிட்டு கொலை நடைபெற்றதா? அல்லது ஆத்திரத்தில் கொலை செய்தாரா? போன்ற விவரங்களை துருவி துருவி கேட்டு விசாரணை நடத்தினர்.
5 கத்திகளை பயன்படுத்தினார்
ஷ்ரத்தாவிடம் லிவிங் டூகெதர் முறையில் வாழ்த்தொடங்கியதில் இருந்து கொலை செய்த சம்பவம் வரை நடைபெற்ற சம்பவங்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், ஷ்ரத்தாவின் உடலை வெட்ட எந்த மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உள்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடைபெற்று இருக்கிறது. இதனிடையே, ஷ்ரத்தா உடலை வெட்ட அப்தாப் பயன்படுத்திய 5 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐந்து முதல் ஆறு இன்ச் நீளம் கொண்டவை
எனினும், ஷ்ரத்தா உடலை வெட்ட பயன்படுத்திய ரம்பம் (Saw) இன்னும் கண்டறியப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட 5 கத்திகளும் ஐந்து முதல் ஆறு இன்ச் நீளம் கொண்டவை என்றும் தடயவியல் சோதனைக்காக இந்தக் கத்திகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஷ்ரத்தா கொலை வழக்கில் தினம் தினம் வெளியாகும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக மாறியுள்ளது.
இன்றும் உண்மை கண்டறியும் சோதனை
அப்தாப்பிடம் இன்றும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதால் மேலும் முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு விரைவில் உரிய தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறினார். இதற்கிடையே, இந்தக் கொலை சம்பவத்தை வகுப்பு வாத பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.