ராஜ்தீப் சர்தேசாய் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யவில்லை..உச்சநீதிமன்றம் விளக்கம்
டெல்லி: பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்து விசாரிப்பதாக வெளியான தகவலை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
ராஜ்தீப் சர்தேசாய், நீதித்துறை குறித்து ஆட்சேபகரமான கருத்து கூறியதாகவும், அது தொடர்பாக கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்து தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிப்பதாக, உச்சநீதிமன்ற வெப்சைட்டில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சில செய்தி சேனல்களில் அதுகுறித்து பிரேக்கிங் செய்திகள் ஒளிபரப்பாகின. ஆனால், இதை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கவனக் குறைவு
இது தொடர்பாக, உச்சநீதிமன்றம் சார்பில் வெளியான அறிக்கையில், ராஜ்தீப் சர்தேசாய் மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளியான பிளாஷ் செய்திகளில் உண்மையில்லை. கேஸ் நம்பர் 02/2021-ன் கீழ், ராஜ்தீப் சர்தேசாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டது கவனக் குறைவால் தவறுதலாக நிகழ்ந்துவிட்டது. இதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ராஜ்தீப் ட்வீட்கள்
கடந்த வருடம், செப்டம்பர் 17ம் தேதி, ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்ட சில ட்வீட்கள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஒப்புதல் அளிக்கவில்லை. இவை சீரியசான ட்வீட்கள் இல்லை என்பதால், ராஜ்தீப் சர்தேசாய் மீது வழக்கு போட வேண்டாம் என சிபாரிசு செய்திருந்தார்.
மனு தாக்கல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்டார்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவை சேர்ந்த ஆஸ்தா குரானா என்பவர் வக்கீல் ஓம்பிரகாஷ் பரிஹார் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று ராஜ்தீப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனு பிப்ரவரி 13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்தீப் மீது குற்றச்சாட்டு
நீதித்துறை குறித்த சர்தேசாயின் சில "அவமரியாதைக்குரிய" ட்வீட்டுகள் "நீதிமன்றத்தை அவதூறு செய்யும்" நடவடிக்கையின் வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று அந்த மனு குற்றம் சாட்டியது. "ஒவ்வொரு தீர்ப்பிலும், ராஜ்தீப் பல்வேறு அவமரியாதைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததாக மீடியா ரிப்போர்ட்கள் கூறின. ஆனால் உடனடியாக அதை சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.