நாளை பாரத் பந்த்.. நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா?
டெல்லி: ஓபிசி சமூகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்மேளனம் நடத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
இதனிடையே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நீண்ட காலமாக நடத்தாமல் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஓபிசி கணக்கெடுப்பை நடத்தக் கோரி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்மேளம் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கோரிக்கை மட்டுமல்லாமல் இன்னும் பிற கோரிக்கைகளும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கோரிக்கைகள் பின்வருமாறு:
- தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை நிறுத்துவது
- சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு
- தனியார் துறைகளில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி சட்டம்
- என்ஆர்சி, குடியுரிமை சட்டம், என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடங்குவது
- ஒடிஸா மற்றும் மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களில் ஓபிசிகளுக்கான தனி வாக்காளர் தொகுதிகள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடியின மக்களை வேறு இடத்திற்கு அனுப்பக் கூடாது
- தடுப்பூசியை கட்டாயமாக்கக் கூடாது
- கொரோனா லாக்டவுன் நேரத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக ரகசியமாக உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பாரத் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த பாரத் பந்த் போராட்டத்தில் என்னவெல்லாம் இயங்கும், இயங்காது என்பது குறித்து அறிவிப்புகள் ஏதும் இதுவரை வரவில்லை.