பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுமா? தாய்ப்பால் கொடுக்கலாமா? முழு தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியும் என்ற தெரியாத நிலையில், பிரசவத்தின்போது தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் பரவுமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துள்ளது.
இந்தியாவில் இப்போதுதான் கொரோனா பரவலின் தாக்கம் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1.36 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வேறு சில சந்தேகங்களும் இயல்பாகவே எழுந்துள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள்
குறிப்பாக, பிரசவத்தின்போது தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவுமா என்ற சந்தேகம் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இதற்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்னர், வேறு சில தகவல்களைப் பார்க்கலாம். பொதுவாகவே, பெண்கள் கர்ப்பமாக உள்ள காலத்தில் அவர்கள் உடல்களில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி மாற தொடங்கும். இதன் காரணமாகக் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு கொரோனா மட்டுமின்றி, சளி போன்ற மற்ற தொற்றுகள் எளிதாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
என்ன செய்யலாம்
அதையும் தாண்டி கொரோனாவால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. லேசான கொரோனா பாதிப்பு இருந்தால், 15 நாட்கள் வரை தனிமையிலிருந்தால் போதும். அதேநேரம் கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்தாலோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி கண்டிப்பாக எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
அச்சம் வேண்டாம்
கொரோனாவால் பாதிக்கப்படும் சில கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக பாரத்தில் மிகக் குறைவான நபர்களுக்கே இதுபோல குறைப்பிரசவம் ஏற்படுகிறது என்பதால் அச்சப்பட தேவையில்லை. இதைத் தாண்டி கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்குக் கூடுதலாக எவ்வித மருத்துவ பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்குப் பரவுமா
கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால், தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள், அதற்குச் சாத்தியம் உள்ளதாகவே கூறுகிறது. இருப்பினும், இது குறித்து உறுதியான தகவல்கள் தற்போது வரை இல்லை. அதேநேரம் திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 225 பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளது. அதில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஒரு நற்செய்தியாகும்.
தாய்ப்பால் கொடுக்கலாமா
அதேபோல அனைவருக்கும் இருக்கும் மற்றொரு சந்தேகம், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் தாய்ப்பால் அளிக்கலாமா என்பது. தாய்மார்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான கொரோனா பாதிப்பு மட்டும் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் இரட்டை மாஸ்க் அணிந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கலாம். தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுவதாக தற்போது வரை எந்த ஆய்வுகள் உறுதி செய்யவில்லை.
அறிகுறி இருந்தால்
அதேநேரம் தாய்மார்கள் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் நேரடியாகக் குழந்தைகளுக்குப் பால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. இதுபோன்ற சமயங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது. அதேபோல கொரோனாவால் பாதிப்பினால் மட்டும் பிரசவத்தின்போது எந்தவொரு சிக்கலும் ஏற்படாது.