"பொறுக்கிகள்" வார்த்தையை விட்ட நாஞ்சில் சம்பத்! உடனே திரண்டு மேடைக்கு வந்த பாஜகவினர்! கடும் ரகளை!
ஈரோடு : ஈரோட்டில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பாஜகவினரை பொறுக்கி என்று குறிப்பிட்டதால், அங்கிருந்த பாஜகவினர் ஆத்திரமடைந்து, நாஞ்சில் சம்பத் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொண்டார் நாஞ்சில் சம்பத். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திராவிட இயக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத், அமைச்சர் மனோ தங்கராஜ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்வில் நாஞ்சித் சம்பத் பேச்சின் போது குறிப்பிட்ட வார்த்தை பரபரப்பைக் கிளப்பியது.
அரங்கில் கூடியிருந்த பாஜக, இந்து மக்கள் கட்சி தொண்டர்கள், நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, மேடையிலும் ஏறி ரகளை செய்தனர். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

விவாத நிகழ்ச்சி
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அரங்கு ஒன்றில் முன்னணி தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக நிர்வாகி திரைப்பட இயக்குநர் பேரரசு, ராம சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த விவாத நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வார்த்தையை விட்ட நாஞ்சில் சம்பத்
இந்த விவாதத்தின்போது பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த பாஜகவினர், இந்து மக்கள் கட்சி அமைப்பினர் அனைவரும் மொத்தமாக எழுந்து கூச்சல் எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு, அதை அவர் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறி ரகளை செய்தனர்.

திரும்பப் பெற்ற நாஞ்சில் சம்பத்
மேலும், மக்கள் நாஞ்சில் சம்பத் பேசியதைக் கண்டித்து மேடை மீது ஏறியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அனைவரையும் அமைதியாக அமரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும், பாஜகவினர் ஏற்காமல் தொடர்ந்து குரல் எழுப்பினர். பாஜகவினரை பொறுக்கிகள் என்று கூறிய நாஞ்சில் சம்பத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, தான் சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார்.

பாதியிலேயே நிறுத்தம்
எனினும், பாஜகவினர் தொடர்ந்து உக்கிரமாக காணப்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நாஞ்சில் சம்பத்தை ஒரு அறைக்கு அழைத்து சென்றதுடன், போலீசாரையும் பாதுகாப்புக்கு வரவழைத்தனர். போலீசார் சமாதானம் செய்து, நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டு கொண்டதால், நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் நாஞ்சில் சம்பத்தை காரில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications