காத்திருக்கும் இபிஎஸ்.. களத்தில் இறங்கிய ஓபிஎஸ் வேட்பாளர்.. அதிமுக என குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில் செந்தில் முருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தென்னரசுவும் ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாகவே பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே, அதிமுகவில் இரு அணிகளையும் ஒன்று சேர்க்க பாஜக முனைப்பு காட்டுவது தெரியவந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
7 ஆம் தேதி அறிவிக்கப்படும்
பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று இந்த சந்திப்பில் பேசி உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? என்பது குறித்து வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தாக்கல்
அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு அரங்கேறி வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்பு மனுவை செய்வதை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒத்திவைத்துள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்பு மனுவை கே.எஸ் தென்னரசு தாக்கல் செய்வார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அன்று அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கூறினார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு?
எனினும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை எதிர்பார்த்து இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அதிமுக சார்பாக ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதனால் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் அணி
இதனால், ஓபிஎஸ் அணியை சேர்ந்த வேட்பாளர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் கேட்டு ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். தன்னை அதிமுக என்று குறிப்பிட்டு இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் கோரியுள்ளார். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று செந்தில் முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.