நாகாலாந்து: பயங்கரவாதிகள் என சந்தேகம்- பாதுகாப்பு படையினரால் 13 பேர் சுட்டுக் கொலை- பெரும் பதற்றம்
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது. நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது.
இம்மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அஸ்ஸாம் ரைபில்ஸ் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
'நாகாலாந்து' காயத்துக்கு தமிழகத்தில் மருந்து போட நினைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. நினைத்தது நடந்ததா?
13 பொதுமக்கள் சுட்டுக் கொலை
ஆனால் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையினர் சுட்டுக் கொன்றது 13 பொதுமக்களைத்தான்.. பயங்கரவாதிகளை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோன்யாக் பழங்குடிகள் தலைவர்கள் கூறுகையில், பாதுகாப்பு படையினர் 13 பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றனர்.
பாதுகாப்பு படை வாகனங்கள் தீக்கிரை
பாதுகாப்பு படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் தாக்கியதில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைவீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் கடும் கண்டனம்
இச்சம்பவத்துக்கு நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நைபியு ரியோ, மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பொதுமக்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் படுகொலைக்கு சட்டப்படியான நீதி பெற்றுத்தரப்படும். அனைத்து தரப்பினரும் அமைதிகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழங்குடி மக்கள் கொந்தளிப்பு
இதனிடையே நாகாலாந்து தலைநகர் கோஹிமா அருகே ஆண்டுதோறும் அரசு சார்பில் நடத்தப்படும் ஹார்ன்பில் கொண்டாட்டங்களையும் இந்த படுகொலை சம்பவம் பாதித்துள்ளது. ஹார்ன்பில் கொண்டாட்டங்களை தாங்கள் புறக்கணிப்பதாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறுகையில், எங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் எப்படி நடனமாடிக் கொண்டிருக்க முடியும்? ஆகையால்தான் ஹார்ன்பில் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கிறோம் என்றனர்.