சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தல்: 50%க்கு மேல் வாக்குகள் பதிவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க உரிமை இல்லை என்ற நோட்டா பட்டன் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
பதவிக்காலம் முடிவடைய இருக்கும் ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு இன்றும் வருகிற 19-ந் தேதியும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
18 தொகுதிகளில் வாக்குப் பதிவு
முதல் கட்டமாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தார், தண்டேவடா, பிஜாப்பூர், சுக்மா, கொண்டகார், கான்கேர், நாராணன்பூர், ராஜ்நந்த்கோன் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
143 வேட்பாளர்கள்
18 தொகுதிகளில் 143 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 10 பேர் பெண்கள்.
4142 வாக்குச்சாவடிகள்
18 தொகுதிகளிலும் மொத்தம் 29 லட்சத்து 33 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 4,142 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 1,517 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாகவும், 1,311 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தாகவும் அறிவிக்கப்பட்டன.
காலை 7 மணிமுதல்..
13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
5 தொகுதிகளில்
எஞ்சிய 5 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
50% வாக்குகள்
இன்று மாலை வரை 50%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தது.
நோட்டா பட்டன்
போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோட்டா பட்டன் நாட்டில் முதல் முறையாக இன்று பயன்படுத்தப்பட்டது.
2–ம் கட்ட தேர்தல்
இதர 72 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
உச்சகட்ட பாதுகாப்பு
இந்த தொகுதிகள் அனைத்தும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிக்க பகுதி என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. ஒடிஷா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.