கர்நாடகாவில் தினமும் 27 குழந்தைகள், பெண்கள் மாயம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் தினமும் சராசரியாக 27 குழந்தைகளும், பெண்களும் மாயமாவது அல்லது கடத்தப்படுவது நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நகர்களிலேயே பெங்களூரில் தான் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் மாயமாகியுள்ளது, கடத்தப்பட்டுள்ளது பற்றிய வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை கர்நாடகாவில் 14 ஆயிரத்து 361 பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமானது மற்றும் கடத்தப்பட்டது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
அதில் 11 ஆயிரத்து 283 பேர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களாக வீடு திரும்பியுள்ளனர். மாயமாகி அல்லது கடத்தப்பட்டவர்களில் 72 பேர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
பெங்களூர்
கடந்த ஆண்டு பெங்களூரில் மட்டும் 1, 703 குழந்தைகள், 3 ஆயிரத்து 887 பெண்கள் மாயமாகியுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 218 பேர் அவர்களாக வீடு வந்துள்ளனர் அல்லது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமானவர்களில் 6 பேர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
காரணம்
வீட்டில் கொடுமை, பழிவாங்குதல், வறுமை, தேர்வில் தோல்வி, காதல் விவகாரம், கட்டாய திருமணம், பெற்றோருடன் ஒத்துப் போகவில்லை ஆகிய காரணங்களுக்காக பெண்கள் மாயமாவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
கடத்தல்
மாயமான விவகாரங்களுடன் எந்த ஒரு கடத்தல் மாபியாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போலீஸ்
மாயமாவது, கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த கூடுதல் டிஜிபி தலைமையில் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவு பெங்களூர் உள்பட 9 மாவட்டங்களில் செயல்படுகிறது. மாயமான குழந்தைகள் மற்றும் மாணவர்களை கண்டுபிடிக்க மாநில அரசு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஆபரேஷன் ஸ்மைல் மற்றும் ஆபரேஷன் மஸ்கனை நடத்துகிறது.
காலியிடங்கள்
கர்நாடக காவல் துறையில் 72 ஆயிரத்து 695 பேர் உள்ளனர். ஆனால் காவல் துறையில் 21 ஆயிரத்து 994 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 ஆயிரத்து 954 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.