சுற்றுலா பயணியாக வந்து மதமாற்றம்.. வசமாய் சிக்கிய 3 மதபோதகர்கள்.. நாடு கடத்த அதிரடி உத்தரவு
கவுஹாத்தி: இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி மதமாற்ற செயலில் ஈடுபட்டதாக சுவீடன் நாட்டை சேர்ந்த 3 மதபோதகர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களை உடனே நாடு கடத்த நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் சிலர் கட்டாய மதமாற்ற செயலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கூட சில அமைப்பை சேர்ந்தவர்கள் சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி குறுகிய கால விசாவில் இந்தியா வந்து மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. அந்த வகையில் அசாமில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
சிறப்பு பிரார்த்தனை
அசாம் மாநிலத்தில் ‛யூனைடெட் சர்ச் பாரம்' என்ற அமைப்பு சார்பில் பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று வருகின்றனர். அதன்படி அசாம் மாநிலம் திப்ரூகார்க் மாவட்டம் ஜினாய் பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் நடத்த அந்த அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியது. மாவட்டம் நிர்வாகமும் அனுமதி அளித்தது. இதையடுத்து ஜினாய் கிராமத்தில் உள்ள சர்ச்சில் 3 நாள் பிரார்த்தனை கூட்டம் அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 இன்று வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மதமாற்ற நடவடிக்கை
இந்த கூட்டம் 2 நாட்கள் நடந்த நிலையில் சில வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக பங்கேற்று மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த சர்ச்சின் பிரார்த்தனை கூட்டத்துக்கு சென்று அதிரடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் சட்டத்துக்கு புறம்பாக பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதிரடியாக கைது
அதாவது சுவீடன் நாட்டை சேர்ந்த ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்ரிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகனாசன் ஆகிய 3 பேரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளனர். அதன்பிறகு தேயிலை தோட்ட பகுதியில் நடந்த அமைதி மற்றும் குணப்படுத்தும் பிரார்த்தனை விழாவில் பங்கேற்று தொழிலாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயன்றது தெரியவந்தது. இது சுற்றுலா விசாவுக்கான விதிகளை மீறிய செயலாகும். இதையடுத்து போலீசார் தாமாகவே முன்வந்து சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாடு கடத்த உத்தரவு
அதன்பிறகு அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரித்த நீதிமன்றம் 3 பேரையும் நாடு கடத்த உத்தரவிட்டது. அதாவது 3 பேரும் சுற்றுலா விசாவுக்கான விதிகளை மீறி பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் அவர்களை சொந்தநாடான சுவீடனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என துணை போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் மூவரும் கவுஹாத்தி அழைத்து செல்லப்பபட்டு அங்கிருந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி டிஎஸ்பி நம்ரூப் கூறுகையில், ‛‛ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேரும் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். இவர்கள் மதம்சார்ந்த பரப்புரைகள் செய்யக்கூடாது. ஆனால் விதிகளை மீறியுள்ளனர். இதனால் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளோம்'' என்றார். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிதுல் சேட்டியா கூறுகையில், ‛‛விசா விதிமுறைகளை மீறி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மூவர் மீதும் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது. நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'' என்றார்.