ரூ. 13-க்கு 3 வேளை உணவு வேண்டுமா... உடுப்பி இல்ல... உ.பி.க்கு செல்லுங்க
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.13-க்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறுமை நிலையில் உள்ளவர்களும் 3 வேளை உணவு உட்கொள்ள ஏதுவாக ரூ.13-க்கு உணவு வவங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்ய உள்ளார்.
சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் பணி நேரத்துக்கு வராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை, அனுமதியில்லாத மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போல் உத்தரப்பிரதேசத்திலும் அன்னபூர்ணா என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இங்கு மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும்.
காலை உணவானது ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவானது தலா ரூ.5-க்கும் என மொத்தம் 3 வேளை உணவு ரூ.13-க்கு வழங்கப்படுகிறது. சோதனை ஓட்டமாக மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சிகளில் இந்த கேண்டீன்கள் தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக பயனாளிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் பெறும் கார்டுகள் (பிரீபெய்டு), டோக்கன்கள் வழங்கப்படும். காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும் , மதியம் , இரவில் 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை வழங்கப்படும். உணவுடன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் வழங்கப்பட உள்ளது.