மோடி சர்க்காரின் 30 நாட்கள் ஆட்சியில் முட்டி மோதிய சர்ச்சைகள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 30 நாட்களாகின்றன.. அதற்குள்தான் எத்தனை எத்தனை சர்ச்சைகள்.. ஜம்மு காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை உலுக்கி எடுத்திருக்கின்றன ஏகப்பட்ட சர்ச்சைகள்..
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த மாதம் 26-ந் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாள் முதலாக பதவியேற்புக்கு இலங்கை அதிபரை அழைத்தது, அமைச்சரவை ஒதுக்கீடு தொடங்கி இன்ன பிற கொள்கை முடிவுகள் வரை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பஞ்சாயத்தாகவே தொடர்கின்றன..
ராஜபக்சேவுக்கு அழைப்பு
மோடி சர்க்கார் பதவி ஏற்கும் போதே தமிழகத்தின் பலத்த எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இனப்படுகொலையாளனாகிய ராஜபக்சேவை எப்படி பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கலாம் என்று தமிழகம் கேள்வி கேட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக டெல்லியில் மோடி பதவியேற்ற நாளிலேயே போராட்டம் நடத்தியது.
சிவசேனா அதிருப்தி
மோடி பதவியேற்ற பின்னர் தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை; முக்கிய துறைகள் ஒதுக்கப்படவில்லை என்று முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா போர்க்கொடி தூக்கி பின்னர் சமாதானமானது.
ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவோம் என்பதுதான் மோடி அரசு அமைந்த பின்னர் கொளுத்திப் போடப்பட்ட முதல் வெடி. இதற்கான கூட்டங்களை நடத்தப் போகிறோம் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறப் போய் காஷ்மீரமே கொந்தளித்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிந்து போகுமா? அல்லது 370வது பிரிவு நீக்கப்பட்டால் பிரிவினை குறித்த பொதுவாக்கெடுப்பு நடைபெறுமா? என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் கொடி கட்டப் பறந்தன.
இதற்குள்ளாக யார் சிறுபான்மையினர் என்ற சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா.
சிறுபான்மையினர் யார்?
மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தமது பேட்டி ஒன்றில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே அல்ல.. பார்சிகள்தான் சிறுபான்மையினர் என்று கூறப் போக அதுவும் வெடித்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி பிரச்சனை வெடித்தது.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தமது கல்வித் தகுதி பற்றி முரண்பாடான தகவல்களை தெரிவித்திருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வெடித்தது. அதாவது 2004 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த தகவல்களுக்கும் தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது தமது கல்வித் தகுதி கொடுத்த தகவல்களும் முரண்பாடாக இருக்கிறது என்பதுதான் புகார். பின்னர் என்னுடைய கல்வித் தகுதியை பார்க்காதீங்க.. செயல்பாட்டை பாருங்க என்று ஸ்மிருதி இரானி சமாளித்து அந்த பஞ்சாயத்தும் முடிவுக்கு வந்தது.
பலாத்கார புகாரில் அமைச்சர் நிகால்சந்த்
இதற்கு அடுத்ததாக மத்திய இணை அமைச்சர் நிகால்சந்த் பலாத்கார புகாரில் சிக்கினார். இதை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தை நடத்திப் பார்த்து ஓய்ந்தது.
என்.ஜி.ஓக்கள்.
பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு என்.ஜி.ஓக்கள்தான் தடையாக இருக்கின்றன என்று கூறி பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத் துறையான ஐ.பி. அறிக்கை கொடுத்தது. அதில் கிரீன்பீஸ் அமைப்பு மற்றும் கூடங்குளம் உதயகுமார் போன்றோரின் பெயர்களை சுட்டிக்காட்டியே குற்றம்சாட்டப்பட்டது. இந்த உளவுத் துறை அறிக்கை ஊடகங்களில் கசிந்தது எப்படி? என்.ஜி.ஓக்கள் அப்படித்தான் செயல்படுகின்றனவா? என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் உருண்டோடின.
இந்தி திணிப்பு
இதற்குப் பின்னர் சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஒட்டுமொத்த தமிழகமே போர்க்கோலம் பூண்டது. இதற்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா குரல் கொடுத்தார். இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் எதிர்ப்புக் குரல் கொடுத்தார். பின்னர் அந்த உத்தரவே இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் இந்தி பேசாத பிற மாநிலங்களுக்கு இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
டீசல், ரயில் கட்டண உயர்வு
மோடி அரசு பதவியேற்ற 30 நாட்களுக்குள் டீசல் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. வரலாறு காணாத வகையில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட இப்போது கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது மோடி சர்க்கார்.
ஆளுநர்கள் பதவி நீக்கம்
அதேபோல் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி நீக்கம் செய்தே தீருவது என்ற மோடி அரசின் கங்கணமும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் நெருக்கடிக்கு பணிந்து உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம் மாநில ஆளுநர்கள் பிடிவாதமாக மறுத்துவிட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது மோடி சர்க்கார்.