வினோதமான மனநோய்... 40 கத்திகளை லபக் லபக்கென விழுங்கிய போலீஸ்காரர்!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் வினோதமான மனநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் 40 கத்திகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அந்தக் கத்திகளை டாக்டர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் 42 வயது போலீஸ்காரர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் சுமார் 40 கத்திகள் இருந்தது கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அந்தப் போலீஸ்காரரிடம் அவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மனநோய்...
அப்போது அவர் வினோதமான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இப்படி அவர் விதவிதமான கத்திகளை விழுங்கி வந்துள்ளார்.
ஆபரேசன்...
அதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழு சேர்ந்து அவருக்கு ஆபரேசன் செய்து அந்தக் கத்திகளை வெளியே எடுத்தனர். வெளியே எடுக்கப்பட்ட கத்திகளில் சில திறந்த நிலையிலும், சில துருப்பிடித்தும் இருந்துள்ளன.
தொடர் சிகிச்சை...
அதிர்ஷ்டவசமாக திறந்திருந்த கத்திகளால் அவரது வயிற்றிலோ அல்லது உணவுக்குழல் பாதையிலோ பெரிய காயங்கள் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிர்ச்சி...
இது தொடர்பாக அந்த போலீஸ்காரருக்கு சிகிச்சை அளித்த ஜிதேந்தர் என்ற டாக்டர் கூறுகையில், "எனது 20 வருட அனுபவத்தில் இப்படிப் பட்ட நோயாளியை நான் பார்த்ததில்லை" என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.