ராஜஸ்தானில் பரிதாபம்.. பட்டினியால் 500 மாடுகள் பலி- விசாரணைக்கு உத்தரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹிங்கோனியாவில் மாடுகள் காப்பகம் உள்ளது. இதில் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காத காரணத்தினால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் பராமரித்து வந்த 500க்கும் மேற்பட்ட மாடுகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கடும் மழையிலும் குளிரிலும் உணவின்றி தவித்து வந்தது. தற்போது கடந்த 2 வாரங்களில் மட்டும் 500 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தன்னார்வலர்கள் மாடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கால்நடை மருத்துவர் மாடுகள் நோய் தாக்கி பலியாகவில்லை என்றும் பட்டினியால் தான் இறந்தன என்றும் உறுதி செய்தார்.
தற்போது இது தொடர்பான விசாரணைக்கு அம்மாநில முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா உத்தரவிட்டுள்ளார்.