காங். ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு வெற்றி
டெல்லி: டெல்லி சட்டமன்றத்தில் முதல்வர் கேஜ்ரிவால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த 28 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையாக கருதப்பட்ட இலவச குடிநீர் வினியோகம் மற்றும் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆகிய திட்டங்களை புதிய அரசு பதவியேற்ற 2 நாட்களிலேயே அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.
அதன்படி தற்காலிக சபாநாயகர் பதவியை பா.ஜ.க. உறுப்பினர் ஜெகதிஷ் முகிக்கு வழங்க ஆம் ஆத்மி முன் வந்தது. ஆனால், இதை பா.ஜனதா ஏற்க மறுத்ததால், காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வருகிற 6 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார். ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மறுநாள் நிறைவேற்றப்படுகிறது. அன்றுடன் கூட்டத்தொடர் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார். . 28 உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 36 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
ஆம் ஆத்மி கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் 8 உறுப்பினர்களும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேசமயம், 31 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக எதிர்த்து வாக்களித்தது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது கேஜ்ரிவால் அரசு.